அண்ணா அறிவாலயம் வந்த வைகோ, பெ.சண்முகம்.. முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த திடீர் சந்திப்பு!
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் சந்தித்துள்ளனர். ஜனவரி மாதம் வைகோ தொடங்க உள்ள மது ஒழிப்பிற்கான நடைபயண அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதேபோல் குடிமனை பட்டா கோரிக்கை தொடர்பான மனுவை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணி இணக்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தரப்பில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அக்கட்சி தலைமை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்தது. இதையடுத்து அந்தக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தாலும், ராகுல் காந்தியின் நோக்கம் திமுக கூட்டணியாகவே இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்துள்ள சூழலில், அடுத்ததாக புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளை இன்னும் சில நாட்களில் தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது.
அதேபோல் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த திமுக குழு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று திடீரென அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வந்தனர். அப்போது வைகோ தரப்பில் ஜனவரி 2ல் தொடங்கவிருக்கும் மது ஒழிப்பு நடைபயணத்திற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலிடன் வழங்கினார்.
திருச்சியில் இருந்து மதுரை வரை மது ஒழிப்புக்கான நடைபயணத்தை வைகோ மேற்கொள்ள உள்ளார். இதனை தொடங்கி வைப்பதற்காக ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் உள்ள பல்வேறு பகுதி மக்களின் குடிமனை பட்டா கோரிக்கை மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின் ஸ்டாலின், வைகோ மற்றும் பெ.சண்முகம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications