சென்னை டூ விழுப்புரம்! ஆன் தி வேயில் தொழுநோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்!
சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலம் விழுப்புரம் சென்று கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், வழியில் தொழுநோயாளிகள் மறுவாழ்வு முகாமிற்கு சென்று நலம் விசாரித்தார்.
தொழு நோயாளிகளிடமிருந்து அதிகாரிகளே இரண்டு அடி தள்ளி நின்ற நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் துணிச்சலோடு அவர்களை அருகில் சந்தித்து நலம் விசாரித்து புத்தாடைகள் வழங்கியிருக்கிறார்.

தொழுநோயாளிகளை இதற்கு முன் வேறு எந்த முதலமைச்சரும் இவ்வளவு அருகில், அதுவும் அவர்களது மறுவாழ்வு முகாமிற்கே சென்று சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஊரே பீதியில் உறைந்து கிடந்த நிலையில், கொரோனா வார்டுக்குள் மிகவும் துணிச்சலாக சென்று கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல் முதலமைச்சர் என்ற பெயரையும் ஸ்டாலின் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசுத் திட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை பற்றி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.
இதற்காக காலை 9 மணியளவில் தனது இல்லத்திலிருந்து கார் மூலம் விழுப்புரம் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், வழியில் பரனூர் தொழுநோயாளிகள் மறுவாழ்வு முகாமிற்கு சென்றார்.
இந்த நிகழ்வு முதலமைச்சரின் பயண நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்றாலும், திடீர் தகவலின் பேரில் அங்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் திரண்டனர்.

தொழுநோய் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடிய நோய் என்பதால் தொழு நோயாளிகளிடம் இருந்து இரண்டு அடி தள்ளியே நின்று கொண்டார்கள் பல அதிகாரிகள்.
ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, தொழுநோயாளிகள் அருகிலேயே சென்று அவர்களுக்கு தனது கரங்களால் புத்தாடைகளும், நிதியுதவியும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து விழுப்புரம் புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications