2 நாட்கள் அவுட் ஆஃப் ஸ்டேஷன்! முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே செல்கிறார் தெரியுமா?
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
தஞ்சாவூரில் கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை நாளை மாலை திறந்து வைக்கும் அவர், நாளை மறுதினம் திருச்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார்.
இதனால் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

பயணப்பிரியர்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை சென்னையில் இருந்துகொண்டே எல்லா பணிகளும் நடைபெற வேண்டும் என நினைக்காதவர். மக்களிடம் செல் என்ற அண்ணா கட்டளையிட்டதற்கு ஏற்ப, ஊர் ஊராக பயணம் செய்து மக்களையும், கட்சிக்காரர்களையும் நேரில் சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். இதனால் தான் பயணம் செய்வதற்கு மட்டும் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர் சலிக்கமாட்டார்.

2 மாவட்டங்கள்
அந்த வாகையில் நாளை தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் (திமுக மாவட்ட அலுவலகம்) நிறுவப்பட்டுள்ள கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து அன்றிரவு தஞ்சையில் தங்கும் அவர், 30-ம் தேதி திருச்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்தும் அம்மாவட்ட நிர்வாகிகளுடன் சிறிது நேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பதால் அது தொடர்பாக சரிபார்த்தல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தடபுடல் வரவேற்பு
தமிழக அமைச்சர்களில் பவர்ஃபுல் அமைச்சர்களாக வலம் வரும் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முதலமைச்சரை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றனர். இதனிடையே அண்மையில் கனமழையால் பெயர்ந்து போன சாலைகளை முதல்வர் வருகையை ஒட்டி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செப்பனிடும் பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications