செந்தில் பாலாஜி மீது தனி பாசம்.. அமைச்சரவை மாற்றத்துக்கு ஸ்டாலின் காத்திருந்தது ஏன்? மேட்டர் இதுதான்
சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராக நாளை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் நாளை 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை மாற்றத்தை தள்ளிப்போட்டதன் பின்னணியும், செந்தில் பாலாஜி மீது அவருக்கு இருக்கும் பாசம் பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நீண்ட காலமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் இதுதொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துவிட்டது.

அதாவது தமிழக அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தமிழக அரசு அனுமதி கோரிய நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி நாளை மாலை 3.30 மணிக்கு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது.
அப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை கரூர் தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் எம்எல்ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோவி செழியன், ஆர் ராஜேந்திரன் (சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ), ஆவடி நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள்.
இதுதவிர அமைச்சர்கள் பொன்முடி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ராஜகண்ணப்பன், மெய்யநாதன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதேபோல் நிதிஅமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தான் தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது தொடர்ந்து தள்ளிப்போனதன் பின்னணியில் செந்தில் பாலாஜி விவகாரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலின் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார். இதனால் தான் 2021ல் ஆட்சியை பிடித்தவுடன் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை வழங்கினார். ஆனால் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராகவே சில மாதங்கள் நீடித்தார். எப்படியாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிடும். அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் முதல்வர் ஸ்டாலின் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இருந்தார். ஆனால் சில மாதங்கள் கடந்தும் ஜாமீன் கிடைக்காததால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அமலாக்கத்துறை வழக்கில் எப்படியாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று திமுகவினர் நம்பினர். இந்த தகவல் முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை எதிர்நோக்கி காத்திருந்தார்.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும். அதில் செந்தில் பாலாஜியை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படியே 2 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததால் உடனடியாக தமிழக அமைச்சரவை மாற்றம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications