Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளுவரும் கசந்துவிட்டாரா? தமிழகத்தை புறக்கணித்தால் தோல்விதான்! பாஜகவுக்கு முதல்வர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். மேலும் பாஜக அரசுக்கு திருவள்ளுவரும் கசந்துவிட்டார் என்றும் மேலும் மேலும் தமிழகத்தை புறக்கணித்தால் மேலும் மேலும் பாஜக தோல்வியை சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வணக்கம், இன்றைய தினம் பிரதமர் தலைமையிலான நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய நான், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதி நிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

cm stalin niti aayog budget 2024

தமிழகத்தில் நடைபெறும் உங்கள் திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகளாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது என்பது உங்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும். நம் அரசின் திட்டங்களின் பயன்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாக கிடைக்கிறது. அதனால்தான் திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி குவியுது.

நாள்தோறும் திட்டங்கள் மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி- இதுதான் நம் அரசின் எண்ணம். இப்படிப்பட்ட நம் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிற செய்யும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறேன்.

ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமில்லை, வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும். இப்படித்தான் தமிழக அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஏன் மோடி தலைமையிலான பாஜக அரசு வருவதற்கு முன்பிருந்த எல்லா மத்திய அரசுகளும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்த பெருந்தன்மை மத்திய பாஜக அரசிடம் இல்லை.

இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசியல் நடத்துகிறார்கள். அதற்கு அடையாளம் தான் கடந்த 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பாஜகவை பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள். அப்படி புறக்கணித்த மாநில மக்களை பழிவாங்கும் பட்ஜெட்டாகத்தான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழி வாங்க உருவாக்கியிருக்காங்க. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்பால் அவர் ஏற்றுக் கொண்ட பதவி பிரமாணத்திற்கே முரணானது. மத்திய பாஜக அரசானது தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டுக்கென மத்திய அரசு அறிவித்த ஒரே ஒரு சிறப்பு திட்டம் என்றால் அது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான். ஆனால் அதுவும் 10 ஆண்டுகளாகியும் என்ன நிலைமையில் இருக்கிறது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்திற்கென எந்த சிறப்பு திட்டத்தையும் கொடுக்காமல் தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியலை.

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால் இந்திய மக்கள் அந்த கட்சிக்கு பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒரு சில மாநில கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவால் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. இப்படிப்பட்ட நிலையில் தங்களுடைய சறுக்கலுக்கு என்ன காரணம் என உணர்ந்து பாஜக திருந்தியிருக்ககும்னு நெனச்சேன். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.

பட்ஜெட்டிற்கு இரு தினங்களுக்கு முன்பு கூட நம் தமிழகத்தின் தேவைகள் என்னென்ன என சமூகவலைதளங்கள் மூலமாக மத்திய ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். ஆனால் அதில் இருக்கும் ஒரு திட்டங்களை கூட நிதியமைச்சர் அறவிக்கவில்லை.

அவ்வளவு ஏன் தமிழகம் என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இத்தனை ஆண்டுகளாக சும்மா ஒப்புக்காகவாவது திருக்குறளை சொல்லி பட்ஜெட்டை வாசிப்பார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்து போய்விட்டார் போல! இது போன்ற பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது நிம்மதி அளிக்கிறது.

இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான மத்திய அரசின் நிதியைத்தான்! 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம்தான் அது.

தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து 63 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என 2021 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார்கள். ஆனால் தமிழக அரசுத்தான் இந்த திட்ட பணிகளை முடுக்கிவிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தங்களுடைய பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல் வேண்டுமென்றே 3 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது.

கேட்டால் இது மாநில அரசோட திட்டம் என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள். அப்படி என்றால் ரயில்வே துறையை மாநில அரசுக்கு கொடுத்துவிடுவார்களா? கோவை, மதுரை போன்ற மாநகர்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பது குறித்து மூச்சே விடவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இதே மத்திய அரசு நம் நகரங்களை விட பல சின்ன நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அளித்து நிதியுதவியும் வாரி வழங்கியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல்களில் பல மாநிலங்களில் பாஜகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் மத்திய பட்ஜெட் மூலம் மக்களை பாஜக பழி வாங்கிவிட்டது. மேலும் மேலும் தமிழகத்தை புறக்கணித்தால் மேலும் மேலும் தோல்விகளை பாஜக சந்திக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+