"கோர்ட் போனாலும் விட கூடாது".. அமைச்சர்கள் மீட்டிங்கில் அதிரடியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்!என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆன்லைன் ரம்மி குறித்து முதல்வர் ஸ்டாலின் கறாராக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். முதலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை வெல்லும் மக்கள், பின்னர் அதில் நிறைய தொகையை வெல்லலாம் என்று நம்பி தங்கள் சேமிப்பு தொகை, வருமானத்தை எல்லாம் இழக்கிறார்கள்.
இப்படி பணத்தை இழந்த பலர் தமிழ்நாட்டில் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பேராசிரியர் என்று படித்தவர்கள், படிக்காதவர்கள் பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

தற்கொலை
இந்த நிலையில்தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அக்டோபர் இரண்டாம் வாரம் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஆன்லைன் ரம்மி குறித்து முதல்வர் ஸ்டாலின் கறாராக பேசியதாக கூறப்படுகிறது.

ஆலோசனை
அக்டோபர் இரண்டாம் வாரம் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூடுகிறது. இந்த நிலையில்தான் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்ட மசோதாவை அதில் கொண்டு வரலாமா என்று ஆலோசனை செய்து உள்ளனர். அதே சமயம் சட்டசபையில் மசோதா கொண்டு வரும் முன், அவசர சட்டம் இயற்றி விடலாம். அதன்பின் சட்டத்தை தமிழ்நாடு சட்டசபைக்கு கொண்டு வந்து அதில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று இரண்டு ரீதியான கருத்துக்கள் இதில் ஆலேசனை செய்யப்பட்டு உள்ளன. இதில் அவசர சட்டம் பற்றி முதல்வர் நீண்ட நேரம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி
அவசர சட்டம் கொண்டு வருவதே சிறப்பானது. மேலும் காலம் தாமதம் செய்ய கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. அதே சமயம் இந்த சட்டத்தை கொண்டு வந்தால் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக கோர்ட்டுக்கு செல்லும். அப்படி செல்லும் வகையில் இருக்க கூடாது. கோர்டுக்கு போனாலும் வலுவாக இருக்க வேண்டும். கோர்டில் சட்டம் நிற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.

சட்டம் எப்படி?
இதனால் அதற்கு ஏற்றபடி சட்டத்தின் பகுதிகள் வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் பரிந்துரை செய்யப்பட்டது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது

கறார்
அதிமுக அரசு சரியாக ஆலோசனை பெறாமல், கருத்து கேட்காமல் அவசரமாக சட்டம் இயற்றியது. இதனால்தான் கோர்டில் சட்டம் நிற்கவில்லை. ஆனால் இந்த முறை அப்படி நடக்க கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அக்டோபர் இரண்டாம் வாரம் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு முன்பாக இதில் அவசர சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications