தூய்மையும்; வெளிப்படையும் நிர்வாகத்தில் தேவை... திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர்கள், நிர்வாகத்தில் தூய்மையையும், வெளிப்படைத் தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் நம் பக்கம், நாம் மக்கள் பக்கம் என்கிற வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

திமுக வெற்றி
140 மாவட்ட உறுப்பினர் (கவுன்சிலர்) பதவிகளில் 138 இடங்களில் தி.மு.கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பினையும் தி.மு.கழக அணியே பெறுகின்ற வாய்ப்பினை மக்கள் வழங்கியுள்ளனர். அது போலவே, 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் 1000 இடங்களுக்கும் கூடுதலாக தி.மு.க. அணி வெற்றி பெற்றுள்ளது.

பரப்புரை இல்லை
உங்களில் ஒருவனான நான், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நேரடியாகப் பரப்புரை செய்ய இயலவில்லை. அதற்குக் காரணம், முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே காத்திருந்த சவால் நிறைந்த கடமைகளும், அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளும்தான். நிதி நெருக்கடி மிகுந்த சூழலிலும் கழகம் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 150 நாட்களுக்குள்ளாக 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது நமது அரசு.

வெற்றிச் சான்றிதழ்
வெற்றிபெற்ற கழகத்தினர் தங்களின் வெற்றிச் சான்றிதழை என்னிடம் காண்பித்து, வாழ்த்து பெறுவதற்காக நேற்று (அக்டோபர் 13) அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார்கள். இடைவிடாத பணிகளுக்கிடையிலும், இரண்டு மணி நேரத்தை அவர்களுக்காக முழுமையாக ஒதுக்கி, வெற்றி பெற்றுள்ள கழகத்தினரை நேரில் பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

எதிர்க்கட்சி
உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாகச் சீரழித்த முந்தைய ஆட்சியாளர்கள் நம் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் புறங்கையால் தள்ளி, தி.மு.கழகத்திற்கு கிட்டத்தட்ட 100 விழுக்காடு வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஓர் எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியைக்கூடத் அவர்களுக்குத் தருவதற்கு மக்கள் முன்வரவில்லை - மனமிரங்கவில்லை.

மனசாட்சி
மக்கள் பணியில் ஈடுபடும்போது நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள் - வலியுறுத்தல்கள், ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் சாதாரண மனிதர்களின் தெளிவான பார்வைகள் - பதிவுகள் ஆகியவையும் கூட எதிர்க்கட்சியின் பணிதான். அத்தகைய கருத்துகளை மனதில் கொண்டு, மக்கள் பணி எனும் மகேசன் பணியை நமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

தூய்மை
மக்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாகக் திகழ்கிறது என்று இந்திய ஊடகங்கள் அனைத்தும் பாராட்டுகின்றன. அந்தப் பாராட்டுப் பத்திரங்கள், பத்திரமாக நிலைத்திடும் வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். தூய்மையான - வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்கிட வேண்டும்.

எஜமானர்கள்
மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாகவே கூடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும் - எப்பொழுதும் நெஞ்சில் கொண்டு செயலாற்றிட வாழ்த்துகிறேன்.

அடுத்த தேர்தல்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும். மக்கள் நம் பக்கம்; நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நமது செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும்.












Click it and Unblock the Notifications