மு.க.முத்து மறைவு! துர்கா ஸ்டாலினின் "அவரும் நானும்" பாகம் 2 புத்தக வெளியீட்டு விழா ஒத்திவைப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா எழுதிய அவரும் நானும் பாகம் 2 நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்டாலினின் மூத்த சகோதரன் மு.க.முத்து மறைவையொட்டி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தனது கணவர் குறித்தும் தங்களது இல் வாழ்க்கை குறித்தும், குமுதம் சினேகிதி இதழில் 5 ஆண்டுகளாக தளபதியும் நானும் என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார்.

இதற்கு வாசகர்கள் அதிக வரவேற்பு கொடுத்ததை அடுத்து அந்த தொடரில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருந்தார் துர்கா. ஸ்டாலினின் அரசியல் பயணம், மிசா நெருக்கடி, குடும்ப நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாக கொண்டு வந்திருந்தார்.
இதையடுத்து அந்த தொடர் எல்லாம் தொகுக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி "அவரும் நானும்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மீனாகுமாரி வெளியிட துர்கா ஸ்டாலினின் பேத்திகளான தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த புத்தக வெளியீட்டு விழா குமாரராஜா முத்தையா ஹாலில் நடந்தது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அவரும் நானும் புத்தகத்தின் இரண்டாவது பாகம் உயிர்மை பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திலும் குடும்ப நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள் என நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. கோட்டூபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தின் முதல் பிரதியை தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சுப்ரியா சூலே வெளியிட எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மூத்த சகோதரன் மு.க.முத்து இன்று திடீரென உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று திமுக சார்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications