CM VIJAY: முதல்வர் சீட்டில் உட்கார்ந்த.. முதல் நாளே விஜய் சந்திக்க போகும் 3 பிரச்சனை!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அசத்தலான வெற்றியுடன் தமிழ்நாட்டை அடுத்த 5 வருடம் ஆளப்போகிறது. நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் தருணம் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் அறிவித்த பல்வேறு நலத் திட்டங்கள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெற்றி பெறுவது ஒரு சவால் என்றால், ஆட்சியை நடத்துவது முற்றிலும் வேறு சோதனை. முதலமைச்சர் சீட்டில் அமர்ந்த முதல் நாளிலேயே விஜய்க்கு முன்பு நிற்கும் மூன்று முக்கிய பிரச்சனைகள் அவரது ஆட்சியின் ஆரம்பத்தையே சவால்மிக்க ஒன்றாக மாற்றும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

வாக்குறுதிகளும் - கள நிலவரமும்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களின் உடனடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும்போது நிதி, சப்ளை மற்றும் நிர்வாக சிக்கல்கள் புதிய அரசுக்கு கட்டாயம் வரும். இதில் முக்கியமாக 3 திட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் இல்லத்தரசிகளின் சமையல் செலவை கணிசமாகக் குறைக்கும். இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு பெரும் நிதி நிவாரணத்தை தரும்.
ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போது முதல் பிரச்சனை எரிவாயு சிலிண்டர் சப்ளை தட்டுப்பாடு. உலக அளவில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்படும் பதற்றம் எரிவாயு இறக்குமதியை கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் சப்ளை தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இதை விஜய் தலைமையிலான அரசு எப்படி உடனடியாக செயல்படுத்தும்?
இந்தியாவில் பெரும்பாலான சிலிண்டர்களை இறக்குமதி செய்யும் நிலையில், விலை உயர்வும், சப்ளை குறைவும் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த இலவச சிலிண்டர்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டிய நிதிச் சுமை மிகப் பெரியதாக இருக்கும்.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்தால், அரசின் செலவு இன்னும் அதிகரிக்கும். இதனால், திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதா அல்லது படிப்படியாக செயல்படுத்துவதா என்பது முதலமைச்சராத போகும் விஜய்க்கு முதல் நாளிலேயே தீர்க்க வேண்டிய கடினமான முடிவாக அமையும்.
200 யூனிட் இலவச மின்சாரம்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வாக்குறுதியும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மின்சாரக் கட்டணச் சுமையிலிருந்து பல குடும்பங்களை விடுவிக்கும் என்பதால் இது 2 மாதத்திற்கு ஒரு முறை செலுத்தும் மின் கட்டணம் குறையும்.
ஆனால், இந்தத் திட்டத்தின் நடைமுறை சிக்கல் கோடைக் காலத்தில் தான் வரும். அப்போது தான் மக்கள் மத்தியில் மின்சாரத் தேவை மற்றும் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும். குளிர்சாதனப் பயன்பாடு அதிகரிப்பதால் அரசு அதிக அளவில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டின் மின்சாரத் துறை நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் கடன் சுமையில் தத்தளித்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தால் வருமானம் குறையும் நிலையில், தற்போது 200 யூனிட் கொடுக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி கொடுத்துள்ளது.
இதற்காக அரசு பட்ஜெட்டில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது. இல்லையென்றால் மின்சாரத் துறையின் நிதி நிலைமை மேலும் மோசமாகும். எனவே, 200 யூனிட் இலவச மின்சாரத்தை எப்படி தொடர்ந்து வழங்க முடியும் என்பது விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு முதல் நாளே வரும் முக்கியமான பிரச்சனையாகும்.
ஏழைப் பெண்களுக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச் சேலை
திருமணம் செய்யும் ஏழைப் பெண்களுக்கு ஒரு சவரன் (சுமார் 8 கிராம்) தங்கம் மற்றும் தரமான பட்டுச் சேலை வழங்கும் திட்டம் பெண்களின் திருமணச் செலவை குறைக்கும் என்று கண்ணோட்டத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்த வாக்குறுதியை கொடுத்தது.
இது சமூக அளவில் முக்கியமான உதவியாக அமையும். ஆனால், தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 1.22 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்தத் திட்டத்தை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அமல்படுத்தினால், அரசுக்கு ஏற்படும் மொத்த நிதிச் சுமை மிகப் பெரிய அளவில் இருக்கும்.
தங்க விலை உலக சந்தையில் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும் என்பதால், இந்தத் திட்டத்தின் செலவு ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு நாளும் மாறுபடும். இதனால், நிதி ஒதுக்கீட்டை சரியாகத் திட்டமிடுவது முதலமைச்சர் விஜய்க்கு முதல் நாள் சவாலாக அமையும்.
நலத் திட்டங்கள் vs நிதி ஒழுங்கு - பெரிய சவால்
இந்த மூன்று திட்டங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக மேம்படுத்தும் வகையில் இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரசின் நிதி நிலைமையை பாதிக்கும். உலகளாவிய எரிவாயு விலை உயர்வு, மின்சாரத் தேவை அதிகரிப்பு, தங்க விலை ஏற்றம் ஆகியவை அரசின் செலவை அதிகரிக்கும். இதனால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பிற அரசுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த முதல் சில மாதங்கள் அரசின் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால், நிதி நிலைமையை சரியாகக் கையாளாவிட்டால் நீண்ட காலப் பிரச்சனைகள் உருவாகும்.
எனவே, விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு முதல் சோதனை இந்த வாக்குறுதிகளை எப்படி நிலையான முறையில் அமல்படுத்துவது என்பதுதான்.















Click it and Unblock the Notifications