“இது 5 ஆண்டு காலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல!” விஜய்க்கு ஸ்ட்ராங் மெசேஜ்! மு.க.ஸ்டாலின் ஆருடம்!
சென்னை: "நிச்சயமாக இது 5 ஆண்டு காலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல" என்று, விஜய்யின் தவெக ஆட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில், திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜய் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று கூறியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "குழந்தைகள் புதியதாக ஒரு பொம்மையை பார்த்தால் அது வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். ஆனால், இரண்டே நாட்களில் அதை தூக்கி போட்டுவிடுவார்கள். அதுபோலதான் தங்களுக்கு பிடித்த நடிகர் கட்சியை தொடங்கினார் என்பதால் வாக்களித்திருக்கிறார்கள். எனவே விரைவில் அம்மாவை தேடுவதை போல மக்கள் நம்தைதான் தேட போகிறார்கள்.
நான் மிக பெருமையாக சொல்வேன். கடந்த 5 ஆண்டு காலம்தான் கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி. இப்படி சொல்வதன் மூலம் நான் முன்னோர்களை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களை விட நான் பெரியவன் என்று சொல்லவில்லை. அவர்கள் ஆட்சியிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.
யாரும் கவலைப்பட வேண்டாம். நமக்கு தரப்பட்ட வேலையை நாம் சிறப்பாக செய்திருக்கிறோம். மக்கள் அதை உணர்வார்கள். நிழலின் அருமை வெயிலில் தெரியும். இப்போது நடத்திருக்கும் தேர்தலில் வந்திருந்தது அரசியல் சுனாமி அல்ல.. சினிமா சுனாமி. சினிமா கவர்ச்சியை முதலீடாக மாற்றி மக்களை மயக்கி வாக்குகளை வாங்கி இருக்கிறார்கள். அதற்காக எல்லா மக்களையும் மயக்கிவிட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கூட அவர்களால் பெற முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications