“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட்
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் நேற்று மாலை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ஆனால், இந்த அறிவிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய "சீலிங்" (கடன் வரம்பு) முறை, ஒட்டுமொத்த குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியை மீறி தவெக அரசு விவசாயிகளை வஞ்சித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சிக்கப்படுகிறது.
வாக்குறுதி என்ன? தற்போதைய அறிவிப்பு என்ன?
தேர்தல் பிரச்சாரங்களின் போது, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்" என முதலமைச்சர் விஜய் தாராளமாக வாக்குறுதி அளித்திருந்தார். "இது வெறும் வாக்குறுதி அல்ல, உத்தரவாதம்" என்றும் அவர் மேடைகளில் முழங்கினார்.
ஆனால், நேற்று வெளியான தள்ளுபடி அறிவிப்போ முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது:
புதிய சீலிங் முறை: இதுவரை இல்லாத நடைமுறையாக, நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொள்ளாமல், விவசாயிகள் பெற்ற 'கடன் தொகையின்' அடிப்படையில் தள்ளுபடி வரம்பு (Ceiling) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி தரும் கணக்கீடு: இத்திட்டத்தின்படி, ₹50,000 வரை மட்டுமே கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடி கிடைக்கும். ஆனால், ₹1 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சாகுபடி செலவுக்கே போதாது - விவசாயிகள் வேதனை
தற்போதுள்ள சூழலில், இரண்டு அல்லது இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்யக்கூடிய ஒரு விவசாயி சராசரியாக ₹3 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ளார்.
உதாரணமாக, ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ₹60,000-மும், ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ₹36,000-மும் வங்கிகள் கடனாக வழங்குகின்றன. இப்படி இருக்கும்போது, ஒரு லட்சத்திற்கு மேல் கடன் உள்ள விவசாயிகளுக்கு வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் எள்ளி நகையாடுவது போல் உள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் இப்படி நடந்ததில்லை
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த காலங்களில் மத்திய அரசு ₹71,000 கோடியும், முந்தைய தமிழக அரசுகள் இருமுறை ₹12,000 கோடி மற்றும் ₹7,000 கோடி எனப் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. அப்போதெல்லாம் இந்த மாதிரியான 'சீலிங்' முறைகள் கிடையாது. மாநில அரசின் நிதி இருப்பு என்னவென்று தெரிந்துதானே முதல்வர் விஜய் அப்போது வாக்குறுதி அளித்திருக்க வேண்டும்?
கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் கொடுக்கும் சிட்டா அடங்கல் பரப்பளவில் 30 சதவீதத்திற்குத்தான் கடன் வழங்குகின்றன. மேலும், மிகக் குறு விவசாயிகள் பெரும்பாலும் பெருந்தொகையைக் கடனாகப் பெறுவதில்லை. இதனால் இந்த அறிவிப்பால் பயன்பெறுவோர் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த அறிவிப்புக்காக அரசு கூடுதலாக ₹2,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது விவசாயிகளை ஏமாற்றும் செயல்." என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகள்
நிலுவையில் உள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, 5 ஏக்கருக்கு உட்பட்ட அனைத்து சிறு, குறு விவசாயிகளின் கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மீதமுள்ள கடன் நிலுவைகளை ஒத்திவைத்துவிட்டு, தற்போதைய சாகுபடிக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் புதிய பயிர்க்கடன்களை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே விவசாயிகளின் மிக முக்கியப் பிரச்சனையில் தவெக அரசுக்கு எதிராக எழுந்துள்ள இந்த எதிர்ப்பலை, தமிழக அரசியல் மற்றும் விவசாய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications