கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அடுத்து என்னவாகும்? வந்து விழுந்த கேள்வி! அமைச்சர் சேகர்பாபு தந்த நறுக் பதில்
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் இன்னும் எத்தனை காலத்திற்குச் செயல்படும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இருப்பினும், அங்கே டிராபிக் நெரிசல் அதிகரித்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையில், அதை முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி வைத்தார். இருப்பினும், அந்த பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
சேகர்பாபு: இதற்கிடையே இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "தற்போது கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இப்போது முதற்கட்டமாக எஸ்இடிசி பேருந்துகள் முழுமையாக அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்படும். பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் அடுத்து ஓராண்டில் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓராண்டிற்குத் தேவை: அதேபோல கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கவும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கவும், நடைமேம்பாலம் அமைக்கவும் பணிகள் நடந்து வருகிறது. அங்கே நாங்கள் ஒரு 17 ஏக்கர் பரப்பில் காலநிலை பூங்காவை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போதைய சூழலில் இன்னும் ஓராண்டிற்கு கோயம்பேடு பேருந்து நிலையம் தேவைப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு.. மக்கள் கருத்துக்களைக் கேட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான ஒரு இடமாக மாற்றப்படும். மக்கள் தேவையை அறிந்து தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார். எனவே, இப்போதே தேவையில்லா சர்ச்சைகளை இந்த விவகாரத்தில் கிளப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நடவடிக்கை எடுப்போம்: கிளாம்பாக்கத்தில் இருந்து இப்போது எஸ்சிஇடி பேருந்துகள் மட்டுமே இயங்கும் நிலையில், பேருந்து நிலையத்தைப் பராமரிக்க ஏலம் எடுத்தார்கள் மக்கள் தேவைக்கு ஏற்ப கடைகளை அமைப்பார்கள். தற்போது அங்கே அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்துமே அங்கு முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.
மருத்துவ வசதி பெற மருத்துவமனையும் கூட இருக்கிறது. உடனடி தேவைகளை ஆய்வு மூலம் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் இயங்கும் போது, அங்கே அனைத்து கடைகளும் செயல்பாட்டிற்கு வரும்.
தாமதம் இல்லை: இதைத் தாமதம் எனச் சொல்ல முடியாது. படிப்படியாகவே அங்கே பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு எடுத்துக்காட்டிற்குச் சொல்கிறேன். சமீபத்தில் திருச்சி விமான நிலையமும் கூட திறந்து வைக்கப்பட்டது. அங்கே பணிகள் முழுமையாக முடிந்து, அந்த ஏர்போர்ட் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.
ஆனால், கிளம்பாக்கம் பேருந்து திறக்கப்பட்ட உடனேயே அது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. அங்கே பல சவால்கள் இருந்தன. கடந்த ஆட்சியாளர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முறையாகத் திட்டமிட்டுக் கட்டவில்லை. ஆனாலும், அதில் உள்ள சிக்கல்களை நாங்கள் படிப்படியாகச் சரி செய்து வருகிறோம். பேருந்து நிலையம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் போது, அது அனைவருக்கும் திருப்திகரமாகவே இருக்கும்.
பூங்கா: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்தவொரு சிக்கலும் வராமல் இருக்கத் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே, மக்களுக்காக அங்கே நீரூற்றுடன் ஒரு பூங்காவை அமைத்துள்ளோம். அதேபோல காலநிலை பூங்கா ஒன்றையும் அமைத்து வருகிறோம். அது பிப். மாதம் திறக்கப்படும்.
போற்றுவோர் போற்றலும்.. புழுதிவாரி தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் அவருக்கு விட்டுவிட்டு என்ற கொள்கையில் செயல்பாடும் நாங்கள், வசைபாடுவோர் குறித்தும் சரி வாழ்த்துக் கூறுவோர் குறித்தும் சரி கவலைப்படுவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications