ஒரே ஒரு சின்ன மாற்றம்.. ரூ.1000 கோடி செலவு மிச்சம்.. "கிளாம்பாக்கம் மெட்ரோ" அடித்து ஆடும் தமிழக அரசு
சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு மக்கள் எளிதாகச் செல்ல அங்கே மெட்ரோ ரயில் சேவையை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது அதன்படி தற்போது சென்னை விமான நிலையம் வரை இயங்கும் மெட்ரோவை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கிடையே இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் நகரில் டிராபிக் குறைந்தது. ஆனால், கிளாம்பாக்கத்திற்கு மக்களால் எளிதாகச் செல்ல முடியவில்லை என்ற புகார் இருந்து கொண்டே இருந்தது.

சென்னை மெட்ரோ: மக்கள் எளிதாகச் செல்ல ஏதுவாக அங்கே இப்போது ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாகச் சென்னை மெட்ரோவை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இடையில் இதற்கு அதிக செலவாகும் என்பதால் இத்திட்டம் கைவிடப்படுவதாகவும் கூட தகவல்கள் வெளியானது.
இருப்பினும், இப்போது மீண்டும் இத்திட்டம் குறித்து மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இப்போது செலவைக் குறைப்பது குறித்து சென்னை மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை ஆலோசனையில் இறங்கியுள்ளனர். கிளாம்பாக்கம் மெட்ரோ வரையிலான மெட்ரோ ரூட்டை செலவைக் குறைக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
ரூ. 1,000 கோடி செலவு குறையும்: இந்த ரூட்டில் உயர்த்தப்பட்ட பாலத்தில் தான் மெட்ரோ அமையும் நிலையில், பாலத்தின் உயரத்தைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னை மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த புதிய டிசைன் மூலம் குறைந்தபட்சம் ரூ. 1,000 கோடி செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், சென்னை விமான நிலையம் டூ கிளாம்பாக்கம் மெட்ரோ ரூட்டை 3 அடுக்குளில் அதிகாரிகள் வடிவமைத்து இருந்தனர். மேலே மெட்ரோ ரயில், நடுவில் விரைவுச்சாலை மற்றும் கீழே பல்லாவரம் மேம்பாலம் என்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும், குரோம்பேட்டை ரவுண்டானா மற்றும் தாம்பரம் மேம்பாலத்திற்கு மேலேயும் இதேபோன்ற மூன்று நிலைகளில் உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த வடிமைப்பு தான் இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "இப்போது இரண்டு நிலைகள் மட்டும் இருப்பது போல மாற்றி அமைத்துள்ளோம். இதன் மூலம் ஒட்டுமொத்த உயரம் குறையும். செலவைக் குறைக்க மூன்றாவது முறையாக டிசைனை மா்றி இருக்கிறோம்" என்கிறார்கள்.
முதலில் மூன்று அடுக்கு திட்டத்தை வடிவமைத்து இருந்தார்கள். இதன் உயரம் காரணமாகச் செலவு அதிகம் என்பதால் திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது திட்டத்தைத் தயாரித்தனர். அந்த ரூட்டில் சாலையின் அகலம் சுமார் 30 மீட்டர் இருக்கிறது. இதனால் விரைவு சாலை ஒரு பக்கம், மெட்ரோ ஒரு பக்கம் என கட்டலாம் என்ற மாற்றி அமைத்தனர்.
மூன்றாவது முறை: ஆனால் இந்த டிசைன் கூட அதிக செலவு வைப்பதாக இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் மீண்டும் மூன்றாவது முறையாக டிசைனை மாற்றி அமைத்துள்ளனர். தற்போதைய திட்டத்தின்படி, இரண்டு நிலைகள் இருக்கும். ஆனால், அதன் உயரும் குறைவாக இருக்கும் உயரம் குறைவு என்பதால் கட்டுமான பொருட்களின் செலவு தொடங்கி அனைத்து செலவுகளுமே குறைகிறது. இதனால் குறைந்தது 1,000 கோடி ரூபாய் வரை செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இந்த டிசைனை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.. பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பாதையை ஒருங்கிணைத்து உயரத்தையும் அதன் மூலம் செலவையும் குறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதில் இணைந்து செயல்படுவதால் நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டிசைன் இறுதி செய்யப்பட்ட உடன் விரைவில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications