சொகுசு மட்டும் போதுமா? வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவை பாருங்கள்.. கொந்தளித்த நெட்டிசன்.. உவ்வே
சென்னை: சொகுசு ரயிலாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலில் சில நேரங்களில் சேவைகளில் கடுமையான குறைபாடு இருப்பதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், பயணி ஒருவர் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவின் தரம் பற்றி புகார் எழுப்பியிருக்கிறார்.
நமது நாட்டில் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2019- ஆம் ஆண்டு டெல்லி- வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு அடுத்தடுத்து பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பல ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையும், சென்னையில் இருந்து கோவை வரையும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில்: சென்னை - நெல்லை இடையேயான வழித்தடத்திலும் விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சாய்வு இருக்கைகள், விசாலமான ஜன்னல்கள், பயோ டாய்லட், வைஃபை வசதி என ரயில்களில் வசதியை அடுக்கிக் கொண்டே போகலாம். சாதாரண வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் நேரமும் ஓரளவுக்கு இந்த ரயிலில் பயணம் செய்வதால் மிச்சமாகும்.
உணவில் பூச்சி: வந்தே பாரத் ரயில்களில் விமானத்திற்கு நிகரான வசதிகள் இருப்பதாக பரவலாக சொல்லப்பட்டாலும் சில நேரங்களில் ரயில்வே அளிக்கும் சேவையில் குறைபாடு இருப்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக ரயில்களில் இந்திய ரயில்வே உணவு கழகத்தால் அளிக்கப்படும் உணவின் தரம் பற்றி பயணிகள் சிலர் புகார் எழுப்புவதை காண முடிகிறது. தற்போது வந்தே பாரத் ரயிலும் இந்த சர்ச்சையில்தான் சிக்கியிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து குவாலியர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி இருப்பதாக புகார் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். சுபோத் பஹலாஜன் என்ற பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். அதாவது, தனக்கு அளிக்கப்பட்ட ரொட்டி உணவில் பூச்சியும் கிடந்தது.
நெட்டிசன்கள் விமர்சனம்: இதை அப்படியே புகைப்படம் எடுத்து ஐ.ஆர்.சி.டி.சியை டேக் செய்து அந்த பயணி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். உடனடியாக இதைக் கவனத்தில் எடுத்த ஐ.ஆர்.சி.டி.சியும், பதில் கொடுத்துள்ளது. அதில், உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்து இனி இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கப்படும். உங்களின் பி.என்.ஆர் எண்ணையும் தயவு செய்து கொடுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் சொகுசு ரயிலாக அறிமுகம் ஆகி இருக்கும் வந்தே பாரத் ரயிலில் உணவின் தரம் மோசமாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் அதிருப்தி தெரிவித்து இருப்பது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications