Cognizant அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. புது திட்டத்தால் 4000 பேர் பணிநீக்கம்!
சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஐடி சேவைத் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 4,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 1 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர்.
காக்னிசன்ட் நிறுவனம் 'ப்ராஜெக்ட் லீப்' என்ற திட்டத்தின் கீழ் AI மற்றும் டிஜிட்டல் சேவைகளை வலுப்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு 230 மில்லியன் முதல் 320 மில்லியன் டாலர் வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவுகள் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர் வரை சேமிப்பு கிடைக்கும் என நிறுவனம் நம்புகிறது.

இந்த நிலையில் காக்னிசன்ட் நிர்வாகம் செலவுகளை குறைக்க, பணியாளர் குறைப்பை முக்கியமானதாக மாற்றியுள்ளது. இந்த பணிநீக்கத்தில் நடுத்தர பதவிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர பிரிவில் இருக்கும் ஊழியர்கள் குறைப்பது மூலம் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என காக்னிசன்ட் நிர்வாகம் நம்புகிறது.
இதேவேளையில் காக்னிசன்ட் நிறுவனம் இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது காக்னிசன்ட்டின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 3,57,600 ஆக உள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் severance pay மற்றும் இதர சலுகைகளுக்கு சுமார் 200-270 மில்லியன் டாலர் செலவு செய்தாலும், வருடத்திற்கு 300 மில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும் என காக்னிசன்ட் நம்புகிறது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் இத்தகைய மறுசீரமைப்பு இருந்தபோதும், காக்னிசன்ட்டின் வருவாய் உயர்ந்துள்ளது. மார்ச் காலாண்டில் 5.41 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.8 சதவீதம் அதிகமாகும். 2026-க்கான இயக்க வருமான விகிதத்தையும் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
ஐடி துறையில் காக்னிசன்ட் மட்டும் பணிநீக்கம் செய்யவில்லை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஓராகிள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை மறுசீரமைத்து வருகின்றன. AI மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் பாரம்பரிய வேலைகளை குறைத்து, உயர் மதிப்பு சேவைகளை அதிகரித்து வருகின்றன.
இதற்கு முன்பு 2023 ஜனவரியில் புதிய சிஇஓ-வாக எஸ்.ரவி குமார் பொறுப்பேற்ற 4 மாதத்தில் 3,500 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது ரவி குமார் தலைமையில் 2வது முறையாக பணிநீக்கம் செய்யப்படுகிறது. ரவி குமார் முன்னாள் இன்போசிஸ் ஊழியர் ஆவார்.














Click it and Unblock the Notifications