தமிழக முதல்வர் ஹெல்ப்லைனுக்கு வந்த போன் கால்.. சட்டென ஆனந்த கண்ணீர் வடித்த பெண்! நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: முதல்வரிடம் உதவி கேட்டு பலவகைகளில் கோரிக்கைகள் வருகின்றன. கடிதமாக எழுதுபவர் சிலர். ஹெல்ப் லைன் மூலம் உதவியைக் கேட்பவர்கள் சிலர்.
அப்படி ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியவர் 'உங்கள் புகார் என்ன சொல்லுங்க?' எனக் கேட்டபோது பேசியவர் புகார் சொல்லவில்லை. நான்கு வார்த்தை பாராட்டிப் புகழ்ந்து பேச வேண்டும் என்றார். ? "புகார் பெட்டிக்குள் ஒரு புகழுரையா?" என அந்த அழைப்பை எடுத்துப் பேசியவர் வியந்துவிட்டார்.
"நாங்க புகார் கொடுக்கலைங்க. எங்ககிட்ட முதலமைச்சர் நம்பர் இல்லைங்க. அதனால இந்த நம்பருக்கு போன் பண்ணங்க. நான் முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்ங்க" என்றார். மேலும் மேலும் வியப்பை ஏற்படுத்தினார் அந்தப் பெண். 'சரி, உங்க பாராட்டு என்ன சொல்லுங்க. நாங்க முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு போகிறோம்' என்றார் அந்த ஹெல்ப் லைனில் வேலைப்பார்க்கும் அலுவலகப் பெண்.
ஒரே விசிட்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. 200 வருட ஏக்கம் தீர்ந்தது.. 5212 பழங்குடி மக்களுக்கு பட்டா
நா தழுதழுக்க பேச்சு
அந்த முகம் தெரியாத பெண்ணின் குரல் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. அவர் பேச்சின் இடையே நா தழுதழுக்கக் கண்ணீரையும் சிந்தினார். அந்தப் பேச்சில் என்னதான் இருந்தது? "நான் காய்கறி வியாபாரம் பண்றேங்க. என் மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாங்க. கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிக்கிறான். நான் வியாபாரத்திற்காக அதிகாலையிலே மார்க்கெட் போய்விட்டு, திரும்பக் காலை 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். அதனால எம் புள்ளைக்கு காலை சாப்பாடு கொடுக்க முடியாது. அவன் பசியோடுதான் பள்ளிக்கூடம் போவாங்க. ஆனா இப்ப முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார். அவன் தினமும் வயிறு முழுக்க சாப்பிட்டு பள்ளிக்கூடம் போய் படிக்கிறான். அதான் ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி சொல்லலாமென்று கூப்பிட்டேங்க" என்கிறார்.
விசாரித்த அதிகாரிகள்
யார் இவர்? உண்மையாகத்தான் சொல்கிறாரா? அவரைத் தேடிப் போய் பார்த்துள்ளனர் அதிகாரிகள். அந்த போன் கால் உண்மைதான். அவர் பேசியது உண்மைதான். அதை அறிந்த அதிகாரிகள் அந்த அம்மாவை அடையாளம் கண்டு உரையாடிவிட்டு வந்துள்ளனர். ஹெல்ப் லைனுக்குப் பேசிய பெண் மணியின் பெயர் தீபா ராணி. இவர் கோவையைச் சார்ந்த வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். "இதுவரைக்கும் என் பையன் காலையில வெறும் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி தின்றுவிட்டு பள்ளிக்கூடம் போவாங்க. ஆனால் இப்ப முதல்வர் ஸ்டாலின் காலை உணவுக் கொடுத்ததில் இருந்த அவன் சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போறான்.
உணர்ச்சிவசப்படும் தாய்
என்னை மாதிரி உழைக்கும் பெண்களுக்கு இந்தத் திட்டம் உதவியா இருப்பதோட என் பிள்ளையோட ஆரோக்கியத்துக்கும் உறுதுணையா இந்தத் திட்டம் இருக்குங்க. அதான் போன் பண்ணி நன்றி சொல்லலாம்னு சிஎம் செல்லுக்குக் கூப்பிட்டேன்" என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கள் குளமாகும் அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார் தீபா.
தினம் ஒருவகை உணவு
இவரது மகன் பெயர் கதிர். அவன் என்ன சொல்கிறான்? "நான் தினம் காலையில சாப்பிடாமல் போனதால் பல நாள் மயக்கம் போட்டு விழுந்திடுவேன். இப்ப காலை உணவுத்திட்டம் வந்ததால நல்லா சாப்பிட்டு பள்ளிக்கூடம் போறேன்" என்கிறார். கதிர் லிங்கே கவுண்டன் புதூர் கோவை மாநகராட்சியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் பணிபுரியும் ஸ்ரீதேவி முருகன், "இந்தக் காலை உணவுத்திட்டம் பல பெற்றோருக்கு உதவியா இருக்குங்க. ஒரே மாதிரியான உணவு வகைகள் இல்லாமல் தினம் ஒருவகையான உணவு என்பது குழந்தைகளை அதிகம் கவர்ந்திருக்கு.
கல்வி புரட்சி
கூடவே கேசரி போன்ற இனிப்பு உணவும் கொடுப்பதால் அதிகம் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேபோல நவதானிய உணவுகள் வழங்கப்படுவதால் பசியுடன் சேர்த்து ருசியாகச் சாப்பிடுகிறார்கள்" என்கிறார். உண்மைதான். திராவிட மாடல் அரசு என்ற அடையாளத்துடன் இன்று ஸ்டாலின் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்தத் திட்டத்திற்கு முதல் வித்தை விதைத்தவர் நீதிக்கட்சியைச் சேர்ந்த பிட்டி தியாகராயர் 1921 ஆம் ஆண்டு சென்னையில் சிறு அளவில் தொடங்கிய தீப்பொறி மெல்ல அறிவு ஒளியாக மாறி தமிழ்நாட்டில் கல்வி புரட்சியை உண்டாக்கி இருக்கிறது. அதை உணர்ந்ததால்தான் இந்தக் காலை உணவுத் திட்டத்தினை கட்சி வேறுபாடுகள் கடந்து பலரும் வரவேற்று வருகின்றனர். அதற்குச் சரியான சாட்சி, இந்தக் கோவை தாய்.