இருமல் மருந்து விவகாரம்.. இந்திரா ஏஜென்சிஸ் நிறுவன லைசென்ஸ் ரத்துக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் ஆணை!
சென்னை: மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோல்ட்ரிப் இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உரிமத்தை செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட , 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. இப்படியாக மொத்தமாக 22 குழந்தைகள் உயிழந்தன. இந்தக் குழந்தைகள், 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ' ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு வந்த மத்திய பிரதேச காவல்துறையினர் சென்னை அசோக் நகரில் வசித்து வந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்தனர்.
22 குழந்தைகளின் உயிரைப் பறித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தங்களுக்கும் குறிப்பிட்ட மருந்து நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் நிறுவன உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் அழகு சாதனப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட கோல்ட்ரிப் மருந்து விற்கப்படுவதில்லை" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார், "உரிமம் ரத்து செய்யப்படுவதற்கு முன் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?" என கேள்வி எழுப்பினார். மேலும், "ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது. எனவே, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications