காதலிக்க மறுத்த இளம் பெண்.. கத்தியால் குத்திய இளைஞர்.. விரட்டி பிடித்த போலீஸ்.. சென்னையில் பதற்றம்
சென்னை: நந்தம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கத்திக்குத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கத்திக்குத்தில் படுகாயமடைந்த மாணவி அஸ்விதா நந்தம்பக்கம் ஏழுகிணறு இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது அவரை வழிமறித்த நவீன் என்ற மாணவர், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு மாணவி மறுக்கவே தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

கத்தியால் குத்தப்பட்ட மாணவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த காவல்துறையினர் தப்பி ஓடிய மாணவன் நவீனை விரட்டி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகாலமாகவே காதலிக்க மறுப்பு தெரிவிக்கும் இளம் பெண்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. நுங்கம்பாக்கம் சுவாதி தொடங்கி சமீபத்தில் ஓடும் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட சத்யா வரை பல பெண்கள் ஒருதலைக்காதலில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் நந்தம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த முதலாமாண்டு கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியுள்ள நவீன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications