கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை டிச. 7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி.. விவரம்
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நவம்பர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த லாக்வுடன் மேலும் ஒரு மாதத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இல்லை
தமிழக அரசு லாக்டவுனை நீட்டித்துள்ள போதிலும் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. கிட்டதட்ட பள்ளிகள் திறப்பை தவிர அனைத்துக்கும் அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகள் திறப்பு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். தமிழக அரசு ஜனவரியில் இது பற்றி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

பல்கலைக்கழகங்கள்
தற்போதைய நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை டிசம்பர் 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்கள்
மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை முதுநிலை வகுப்புகள்) 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பபட்டுள்ளது.

நீச்சல் குளம்
கல்லூரிகள் திறப்பு மட்டுமல்ல, கட்டுப்பாடுகளுடன் நீச்சல் குளங்கள் செயல்படவும், சுற்றுலாதளங்கள் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது. உள் அரங்குகளில் கட்டுப்பாடுகளுடன் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. பொருட்காட்சிகள் நடத்தவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மெரினா கடற்கரையை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications