அண்ணாமலையை தேடிய ஸ்டாலின்.. காட்டிக்கொடுத்த கனிமொழி! கருணாநிதி நினைவிடத்தில் நடந்ததை கவனிச்சீங்களா
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை தேடியதும், அருகே நின்ற கனிமொழி கையை நீட்டி அண்ணாமலையை காட்டி கொடுத்த சுவாரசிய சம்பவம் நடந்தது.
கருணாநிதி.. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி தனது 94 வயதில் மறைந்தார். திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் மாஜி முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டுகளாக தமிழகத்தில் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வந்தது.

இதையடுத்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக அவரது பெயரில் நினைவு நாணயம் வெளியிட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கு அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டுஇ விழாவையொட்டி கருணாநிதி பெயரில் 100 ரூபாய் நினைவு நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த கருணாநிதி நினைவு நாணயம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க இன்று சென்னை வந்த ராஜ்நாத் சிங் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார். அப்போது ராஜ்நாத் சிங் உடன் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் உடனிருந்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அங்குள்ள கருணாநிதி நூற்றாண்டு நினைவு அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.
முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தியபோது முதல்வர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தேடியதும், அருகே நின்ற கனிமொழி அண்ணாமலையை காட்டி கொடுத்ததும், அதன்பிறகு அண்ணாமலையை நோக்கி ஸ்டாலின் கொடுத்த சிக்னலும் அனைவரையும் கவனிக்க வைத்தது. அதாவது ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார்.
அப்போது ராஜ்நாத் சிங்கின் ஒருபுறம் முதல்வர் ஸ்டாலினும், மறுபுறம் மத்திய இணையமைச்சர் எல் முருகனும் நின்றனர். எல் முருகனின் அருகே கனிமொழி எம்பி நின்றார். அப்போது அண்ணாமலை எல் முருகன் மற்றும் கனிமொழிக்கு நடுவே சற்று விலகி நின்றார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென்று அங்கு இங்கும் பார்த்தார். அவர் அண்ணாமலையை தேடினார். இதனை உணர்ந்த கனிமொழி எம்பி தனது அருகே அண்ணாமலை நிற்பைதை ஸ்டாலினிடம் கைக்காட்டி காண்பித்தார்.
இதையடுத்து அண்ணாமலையை கவனித்த ஸ்டாலின், தனது கையை உயர்த்தி முன்நோக்கி வந்து எல் முருகனுடன் நெருங்கி நிற்கும்படி சிக்னல் செய்தார். அதேபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அண்ணாமலையை நெருங்கி வரும்படி கையை அசைத்தார். அதன்பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நின்று கருணாநிதியின் நினைவிடத்தில் வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு கருணாநிதி நூற்றாண்டு நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். இந்நிலையில் தான் அண்ணாமலையை ஸ்டாலின் தேடி முன்நோக்கி நெருங்கி வரும்படி அழைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications