முக்கிய நகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு குறைவே.. தமிழக அரசு தகவல்
சென்னை: நாட்டிலுள்ள பிற முக்கிய நகரங்களை ஒப்பிடும் போது, தலைநகர் சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு குறைவாகவே காணப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் மட்டும் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் இறப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

பெரும்பாலும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை தான் காற்று மாசுபாட்டிற்கு காரணமாக உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் பேட்டரி கார்களை அதிகளவில் பயன்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2020-ம் ஆண்டிற்குள் நாட்டில் 60 லட்சம் பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே காற்றின் தரம் மிக மோசமாக உள்ள நகரங்களில் பட்டியலில் டெல்லி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விட சென்னையில் காற்று மாசுபாடு குறைந்தே காணப்படுவதாக கூறியுள்ளது.
மேலும் சென்னையில் வாகன பெருக்கங்களால் ஏற்படும் புகை மாசை கட்டுப்படுத்த, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து ஆராய எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் காற்று மாசின் அளவை கண்டறிய மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய தேசிய காற்று தர ஆய்வு திட்டத்தின் கீழ் 8 இடங்களில் காற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. காற்றை பாழ்படுத்தும் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, நுண்துகள் 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் ஆகியன அளவிடப்பட்டு வருவதாக அரசு கூறியுள்ளது
இதன்படி சென்னை நகரில் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு உள்ளிட்டவற்றின் ஆண்டு சராசரி அளவானது, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குட்பட்டே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் புதிய டீசல் ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. எல்.பி.ஜி மூலம் இயங்கும் ஆட்டோகளுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்கும் வகையில் எரிவாயுவை குழாய் மூலமாக எடுத்துச் செல்ல சென்னை நகரில் வசதியில்லை.
காற்று மாசுபாட்டை குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ள தமிழக அரசு, சென்னை நகரில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை கொண்டு வர தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications