பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை; பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு
எஸ்பி அந்தஸ்த்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். மேலதிகாரியான சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக அவரை எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் எஸ்பியை காரில் ஏறச் சொன்ன சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை கமிட்டி
இந்த விவகாரம் குறித்து அப் போதைய டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது.
சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு
இதனிடையே, இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொட ரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''புகார் குறித்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்காணித்து வருகிறார்.
விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்பி அளித்த புகாரின் அடிப்படை யில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பித்துள் ளோம்'' என்று தெரிவித்தார்.
''புகார் மீதான விசாரணை தொடர்பாக தனி நீதிபதி கண்காணித்து வரு வதால், மேற்கொண்டு சிபிஐ விசா ரணைக்கு அவசியம் இல்லை'' என கூறி வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு தற்போதைய விசாரணையில் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெளிவுப்படுத்தினர்.
பெண் அதிகாரி வாக்கு மூலம்
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல், நடுவர் முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
400 பக்க குற்றப்பத்திரிக்கை
இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்கல் செய்தனர்.
இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபிக்கு உதவி செய்ததாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருப்ப தாக கூறப்படுகிறது.
விசாகா கமிட்டி அறிக்கை
பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி, 14 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. விசாகா கமிட்டியின் முதல்கட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேரில் ஆஜர்படுத்த உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விழுப்புரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற நடுவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி இருவருக்கும் சம்மன் அனுப்பி வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.