மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்.. மாற்றுத்திறனாளிகள் இயக்குநரக நீதிமன்றத்துக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மாற்றுத்திறனாளிகள் இயக்குநரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவாகப் பேசியதாக மகா விஷ்ணு மீது தாய்க்கரங்கள் அமைப்பு புகார் மனு அளித்துள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடையே மூடநம்பிக்கைளை விதைக்கும் வகையில் மகாவிஷ்ணு என்ற இளைஞர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும், பாவ புண்ணியங்கள் குறித்து பேசி மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கடும் கண்டனம் எழுந்தது. இது தொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய மகாவிஷ்ணு, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், முத்தியால் பேட்டை பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் மாற்றுத்திறனாளியான வடிவேலன் என்பவர் சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். இந்த வழக்குகளிலும் மகாவிஷ்ணு கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
மகாவிஷ்ணு மீது பார்வை மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தாய் கரங்கள் என்ற அமைப்பு.
பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாய்க்கரங்கள் அமைப்பு தமது மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளது.












Click it and Unblock the Notifications