கொடுமை.. கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தில் அசால்ட்டாக கலக்கப்படும் கழிவுநீர்.. கதிகலங்கும் சென்னை
சென்னை: சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் அளவு கழிவு நீர் கலக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் சுமார் 1 கோடிக்கும் அதிமாகனோர் வசித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளில் புழல் ஏரி முக்கியமானதாகும். இந்த ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்கு ஏராளமான சிறு கால்வாய்கள் இருந்தன. இந்த உபரிநீ்ர் கொண்டு புழல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வந்தது. நெல், சில பயிறு வகைகள், முலாம்பழம் போன்ற பழங்கள் போன்றவை இந்த கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டன.

ஆனால் காலப்போக்கில் குடியிருப்புகள் அதிகரித்த நிலையில் வேளாண் நிலம் முற்றிலுமாக அழிந்துபோனது. அதேபோல இந்த சிறு ஓடைகளும் முற்றிலுமாக சாக்கடை செல்லும் கால்வாய்களாக மாறிவிட்டன. இதனை மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது மற்றொரு பிரச்னை பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது புழல் ஏரியில் நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் அளவில் கழிவு நீர் கலக்கப்படுகிறது என்பதுதான் இந்த புகார்.
4400 ஏக்கர் பரப்பளவில் 3,300 மில்லியன் கனஅடி அளவில் கொள்ளவு கொண்டுள்ள இந்த பிரமாண்ட ஏரியிலிருந்து பெறப்படும் நீரைதான் சென்னை மக்கள் அன்றாடம் குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த ஏரியானது திருமுல்லைவாயல் தொடங்கி பொத்தூர் வரை 14 இடங்களில் கரையை கொண்டிருக்கிறது. இந்த கரைகளை சுற்றியுள்ள குடியிருப்புகளிலிருந்து ஏரிக்கு கழிவு நீர் நேரடியாக திருப்பி விடப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக திருமுல்லைவாயல் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் போன்ற குடியிருப்பு பகுதியிலிருந்து மழைநீர் கால்வாய்கள் இந்த ஏரியில் இணைந்திருக்கிறது.
ஆனால், இந்த கால்வாயில் கழிவுநீர் திருப்பிவிடப்படுகிறது. இதனால் பிலாஸ்டிக் உட்பட ஏராளமான கழிவுகள் ஏரியில் கலக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் யாவும் இப்போது முழுமையாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரே இடத்தில் வேலை தொழில் முதலீடுகள் குவிக்கப்படுதல்தான் இந்த பிரச்னைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தொழில் முதலீடுகளை நோக்கி மக்கள் சென்னைக்கு கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான குடியிருப்புகள் தவிர்க்க முடியாததாக உருவாக்கப்படுகிறது. எனவே இதனை மாற்ற தொழில் முதலீடுகள் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இந்த பிரச்னைகக்கு உடனடி தீர்வு காணும் வகையில், ஆவடி நகராட்சி அதிகாரிகள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது கழிவு நீர் மழைநீர் வடிகால்களில் கலக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தடுக்கப்படுவதன் மூலம் புழல் ஏரியில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்கலாம். அதேபோல நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த நீர்நிலைகளையும் அதிகாரிகள் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மட்டுமல்லாது ஆவடி மாநகராட்சி பகுதியில் இன்னும் பாதாள சாக்கடை திட்டம் முழு பயன்பாட்டுக்கு வரவில்லை எனவே இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தற்காலிகமாக தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications