முழு ஊரடங்கு.. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பாலைவனமாகின.. ஈ, காக்கா இல்லாத சாலைகள்
சென்னை: இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் மக்கள் கூட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Recommended Video
தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு மேலும் மே 3ஆம் தேதி வரை தொடர்கிறது. கொரோனா பாதிப்பில் தமிழகம் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இன்று காலை 6 மணி முதல் 29-ஆம் தேதி இரவு 9 மணி வரை 4 நாட்களும், அது போல் சேலம், திருப்பூர் ஆகிய இடங்களில் இன்று காலை 6 மணி முதல் 28 ஆம் தேதி வரை இரவு 9 மணி வரை 3 நாட்களும் பிறப்பித்துள்ளது.

மதுரை
அதாவது இந்த இடங்களில் எல்லாம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் 495 பேருக்கும், கோவையில் 141 பேருக்கும், மதுரையில் 60 பேருக்கும், சேலத்தில் 30 பேருக்கும், திருப்பூரில் 110 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆள் அரவம்
இதையடுத்து மேற்கண்ட நகரங்களில் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் இல்லாமல் வெறிச் சோடி கிடக்கின்றன. அது போல் சென்னையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நேற்றே காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். அண்ணாசாலை, கோயம்பேடு, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டன. இத்தனை நாளாக காய்கறிகள் வாங்க யாராவது வீட்டை விட்டு வெளியே வந்தவண்ணம் இருந்தனர். இந்த நிலையில் இன்று அதற்கும் தடைவிதிக்கப்பட்டதால் அனைத்து சாலைகளும் ஆள் நடமாட்டமின்றி இருந்தன.

தேவையின்றி
முழு ஊரடங்கு அறிவித்துள்ள நகரங்களில் நேற்று 3 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கலாம் என முதல்வர் அறிவித்ததை அடுத்து கோவையில் நேற்றே பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனர். கோவையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது பொதுமக்கள் யாரும் வெளியே நடமாடுவது காணப்படுவதில்லை. நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையும் மீறி பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாடினால் கடுமையான சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள்
சேலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக பல்வேறு கட்டுபாடுகளுடன் செயல்பட்டு வந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் நடைபயிற்சிக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர கூடாது என உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ராமன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களுடம் வீடு தேடி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈ காக்கா
அது போல் திருப்பூர், மதுரையில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மூடிக் கிடந்தன. இத்தனை நாட்களும் ஊரடங்கு இருந்த நிலையிலும் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருந்தன. மக்கள் நடமாட்டமும் இருந்தது. ஆனால் இன்று முதல் 4 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பிஸியான நகரங்கள் கூட இன்று ஈ, காக்கா இல்லாமல் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications