அரசு விரைவு பேருந்து பயணிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு.. 150 ரூபாய் வரை உயரும் கட்டணம்.. எப்படி?
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை நீக்கப்பட்டதால் பேருந்து கட்டணம் ரூ 50 முதல் 150 ரூபாய் வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தொலைதூரங்களுக்கு செல்ல மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் நாடுகிறார்கள். அதில் இருக்கும் வசதிகளை போலவே ஏசி வசதி உள்ளிட்டவைகளை கொண்ட விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பேருந்துகளில் வார நாட்களில் பயணம் செய்யும் போது 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அதே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பயணம் செய்யும் போது அந்த கட்டண சலுகையும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் தமிழக போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கப்படுகிறது.

இதற்கான உத்தரவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக வெளியான நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு கட்டண சலுகையும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 முதல் 150 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் சற்று அதிருப்தியில் உள்ளனர். கோடை விடுமுறை முடிந்தவுடனாவது இந்த கட்டண சலுகை கிடைக்குமா இல்லை அப்படியே ரத்து செய்துவிடுவார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications