அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு.. ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு ஜாமீன்.. நிபந்தனை என்ன?
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ் மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார். இந்த புகாரையடுத்து மணியன் மீது, பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ள மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு இருமுறை நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மணியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.வி.எஸ் மணியன் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications