ஓபிசி இட ஒதுக்கீடு.. இதைப் பற்றியெல்லாம் கருத்தே இல்லையா.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர் கேள்வி!
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தபட்டோரின் இடஒதுக்கீடு உரிமை பறிப்பு விவகாரத்தில் கருத்து எதுவுமே இல்லையா? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியனும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை முன்வைத்து ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் கட்சியின் கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 70%, இந்திய அளவில் 52%. அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு. அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என பதிவிட்டுள்ளார்.
ஜோதிமணியின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications