எங்க மாவட்டத்துக்குள் வந்து அரசியல் செய்யாதீங்க... திருமாவளவனிடம் கடுப்படித்தாரா திருநாவுக்கரசர்?
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது மகன் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அறந்தாங்கி தொகுதிக்குள் தலையிட்டு அரசியல் செய்ய வேண்டாம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யிடம் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கடிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் திருநாவுகரசரின் மகன் ராமச்சந்திரன். இந்த அறந்தாங்கி தொகுதிக்குட்பட ஒரு கிராமம் தீயத்தூர். இந்த கிராமம்தான் திருநாவுக்கரசரின் சொந்த ஊர்.
இந்த கிராமத்தில் கோயில் பூசாரி கருப்பையா அண்மையில் மர்மான முறையில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். கோவில் வாசலிலேயே பூசாரி தூக்கிலிட்டு தற்கொலை செய்தகொண்ட சம்பவம் சமீபத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

பிரேத பரிசோதனை முடிவுகள்
பூசாரி கருப்பையாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து இரண்டு முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த இரண்டு பிரேத பரிசோதனையிலும் கருப்பையா பூசாரி தற்கொலை செய்து கொண்டதாகவே அறிக்கையின் முடிவுகள் தெரிவித்தன.

திருநாவுக்கரசர் மீது புகார்
ஆனால், தற்கொலை செய்துகொண்டவர் தலித் என்பதால் இந்த விவகாரத்தை விடுதலை சிறுத்தைகள் விடுவதாகவும் இல்லை. அண்மையில், விடுதலை சிறுத்தைகளின் மாநில நிர்வாகி ஒருவர் அறந்தாங்கி தொகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அத்துடன் இந்த விவகாரத்தை திருநாவுக்கரசரும் அவரது மகனும் கண்டு கொள்ளவில்லை என்பதாக அந்த நிர்வாகி, விசிக தலைவர் திருமாவளவனிடம் தெரிவித்தாராம்.

முதல்வர் ஸ்டாலினிடம் புகார்
இதனையடுத்து இந்த விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்ற திருமாவளவன், திருநாவுக்கரசருக்கு எதிராகவும் சில விசயங்களை விவரித்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி இடைவிடாமல் கருப்பையா பூசாரி விவகாரத்தில் தலையிடுவதும் தமக்கு எதிராக காய்களை நகர்த்துவதுமாக இருப்பதை கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் கடும் கோபம் அடைந்தாராம்.

கோபத்தில் திருநாவுக்கரசர்
இந்த நிலையில் திருமாவளவனை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து திருநாவுக்கரசர் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அதுதான் கருப்பையா பூசாரி தற்கொலைதான் செய்துகிட்டார்னு பிரேத பரிசோதனை அறிக்கைகள் திரும்ப திரும்ப சொல்கிறதே.. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட கருப்பையா பூசாரி குடும்பத்தை உங்க கட்சியினர் தூண்டிவிடாமல் இருந்தாலே என் மகன் தொகுதியில் எந்த மோதலும் வராது. நீங்கதான் தேவையில்லாம என் மகன் எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதிக்குள் நுழைந்து அரசியல் பண்றீங்க. இப்படி அரசியல் பண்ணுவதை நிறுத்திவிடுங்க.. ஒரு மரணத்தை வைத்து அரசியல் எல்லாம் செய்யாதீங்க என கடுப்படித்தாராம் திருநாவுக்கரசர். திமுக கூட்டணியில் இந்த விவகாரம்தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறதாம்.












Click it and Unblock the Notifications