ராமநாதபுரத்தில் மோடிக்கு சவால்.. மண்ணைக் கவ்வுவது உறுதி.. அதுக்கு நாங்க கேரண்டி.. பரபரத்த போஸ்டர்!
சென்னை : எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடவிருப்பதாக தகவல்கள் உலவி வரும் நிலையில், "மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவர் மண்ணைக் கவ்வுவது உறுதி.. அதுக்கு நாங்க கேரண்டி.. இங்கே வந்து நிற்க வேண்டியது உங்க கடமை.. தரமா தோற்கடிப்பது எங்க கடமை" என காங்கிரஸ் கட்சியினர் ராமேஸ்வரத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாக காலூன்ற வைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க தேசிய தலைமை வியூகம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் நின்றால் தோற்கடிப்போம் என திமுகவினர் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
பிரதமர் மோடி போட்டியிடுவதாக சொல்லப்படும் ராமநாதபுரம் தொகுதி- இப்படியும் ஒரு சரித்திரம் இருக்கிறதே!
ராமநாதபுரத்தில் மோடி
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் எங்கெங்கு போட்டியிடலாம், எந்தெந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்தெல்லாம் பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக ஒரு தகவல் வேகமாகப் பரவியது.
2 தொகுதிகள்
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய இரு இடங்களில் போட்டியிட்டு வென்றார். பின்னர் வதோதரா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தொகுதி உத்தர பிரதேசத்தின் வாரணாசி என்றும், மற்றொரு தொகுதி தமிழ்நாட்டின் ராமநாதபுரம் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்படுவதாக தகவல் வெளியானது.
காசி + ராமேஸ்வரம்
ஆன்மிகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில், பாஜகவின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்பவே, உத்தர பிரதேசத்தின் வாரணாசியிலும், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியிலும் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வைத்தால், கூடுதல் கவனம் பெறுவதோடு, பாஜக பலம் பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக vs பாஜக
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் திமுக தோற்கடிக்கும் என்றும் திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் மகிழ்ச்சி, மோடி ஒருவர் மட்மே இந்தியாவில் உள்ள 544 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற தகுதி வாய்ந்தவர் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
மண்ணைக் கவ்வுவது உறுதி
இந்நிலையில், ராமேஸ்வரம் நகர் காங்கிரஸ் தலைவர் ஜோ.ராஜீவ் காந்தி, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து ராமேஸ்வரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில், "நிச்சயம் படுதோல்வி.. லட்சியம் நோட்டாவுடன் போட்டி.. ராமேஸ்வரத்தில் மண்ணைக் கவ்வுவது உறுதி. அதுக்கு நாங்க கேரண்டி. மோடி அவர்களே மனசை தளர விடாம இங்கே வந்து நிற்க வேண்டியது உங்க கடமை... தரமா தோற்கடிப்பது எங்க கடமை... ஒத்த ஓட்டு பாஜக" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.