குஷ்பு வீட்டை முற்றுகையிட முயற்சி! உருவ பொம்மை எரிப்பு! வலுத்த எதிர்ப்பு! சென்னையில் 100 பேர் கைது!
சென்னை: சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களின் மனதை புண்படுத்திவிட்டார் எனக் கூறி குஷ்பு வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள், குஷ்புவின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் திரண்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், குஷ்பு உருவப் படத்தை துடைப்பத்தால் அடித்து ஆவேசம் காட்டினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன.

இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் திமுகவை சேர்ந்த இணையவாசி ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பூ, "திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குஷ்புவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதெப்படி சேரி என்று நீங்க சொல்லலாம் என காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு குடைச்சல் கொடுத்து வருகிறார். நேற்றே குஷ்பு வீடு முற்றுகை என அறிவித்திருந்த அவர், மழையால் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றதோடு உருவப் பொம்மையும் எரித்தார். இதற்காக காங்கிரஸார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஷ்பு வீட்டை காங்கிரஸார் முற்றுகையிட முயன்ற நிலையில் பாஜக பிரமுகரும், முன்னாள் காங்கிரஸ்காரருமான கராத்தே தியாகராஜன் குஷ்பு வீட்டுக்கு வந்துவிட்டார். இதனிடையே இது குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார், இது எங்களின் முதற்கட்ட போராட்டம் தான் என்றும் குஷ்பு மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு தொடருவோம் எனவும் எச்சரித்த அவர் நடிகர் சங்கத்திலிருந்து குஷ்புவை நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications