ரஜினி தலைமையில் தனி அணி அமையும்.. கராத்தே தியாகராஜன் புது தகவல்
ரஜினி, ஸ்டாலின் தலைமையில் அணிகள் உருவாகும் என கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை: ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு கராத்தே தியாகராஜன் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

மரியாதை
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம்கூட கராத்தே தியாகராஜனின் இந்த அதிரடி செயல்பாடு குறித்து புகாரும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்தார்.

ரஜினி என் நண்பர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ரஜினியை தான் எதற்காக சந்தித்தேன் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''கடந்த 30 வருடங்களாகவே ரஜினியுடன் நான் நெருங்கிப் பழகி வருகிறேன். அவர் எனது நண்பர்.

மதிப்பது தலைவர் கருணாநிதி
முரசொலியில் அவரை பற்றி வெளிவந்த கட்டுரை பற்றி இருவருமே விவாதித்தோம். அத்துடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினோம். எப்போதுமே ரஜினி மதிக்கும் தலைவர் கருணாநிதிதான். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும்போது ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும், ரஜினி தலைமையில் ஒரு அணியும் அமையும் என்று நினைக்கிறேன். இதனிடையே ரஜினியை பல்வேறு தலைவர்களும் சந்தித்து வருகிறார்கள்.

பாஜகவின் ஊதுகுழல்
அதேபோல தமிழக மக்களும் ரஜினியை அளவுகடந்து நம்பிக்கை வைத்துள்ளனர்" இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார். காங்கிரசுடன் கமல் கூட்டணி பற்றி பேசுகிறாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ரபேல் விமான ஊழல் குறித்து கமல் இதுவரை ஏதாவது கருத்து சொன்னாரா? வாயே திறக்கவில்லை. ஏனெனில் பாஜகவின் ஊதுகுழலாகத்தான் கமலின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications