ஆந்திராவில் இருந்து திடீர் பயணமாக சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. வந்ததுமே ஃப்ளைட்!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 12) சென்னைக்கு வருகிறார். ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த ராகுல் காந்தி திடீர் பயணமாகச் சென்னைக்கு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் டீம் முன்கூட்டியே சென்னைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பியாக இருந்து வருகிறார். இவர் ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணத் திட்டம் மாறியது.

புதிய பயணத் திட்டத்தின்படி எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி திடீர் பயணமாக சென்னை வருகிறார். ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறார். தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானம் மூலம் பயணிக்கவுள்ளார். இந்த குறுகிய பயணத்தில் அவர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது ஆந்திராவில் இருந்து நேரடியாக ரயில் மூலம் ராகுல் காந்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவுள்ளார். வாரங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்று (பிப்ரவரி 11) ரவு 7.45 மணிக்கு வாரங்கல் ரயில் நிலையத்திலிருந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி.
இன்று (பிப்.12) காலை 6.35 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்கிறார் ராகுல் காந்தி. அங்கு அவருக்கு காங்கிரஸ் மாநில தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து ராகுல் காந்திகார் மூலம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் சென்றடைவார்.
தொடர்ந்து ராகுல் காந்தி, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (பிப்ரவரி) புதன்கிழமை காலை 8.05 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.
ராகுல் காந்தி வருகையையொட்டி அங்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு ரயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியை வரவேற்கக் காங்கிரஸ் தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே விஜய்யின் அரசியல் கட்சி தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல செய்திகள் வெளியாகி வருகிறது. பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் நேரடியாகச் சென்னைக்கு வந்து விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ராகுல் காந்தியின் இந்த வருகை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எனினும், சென்னையில் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications