வெறும் வேஷம்.. யாரு இவங்களா.. தமிழை தூக்கிப் பிடிப்பது? ஜேபி நட்டாவை அட்டாக் செய்த செல்வப்பெருந்தகை!
தமிழ்மொழி விரோதிகளான பாஜக கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனச் சாடியுள்ளார் செல்வப்பெருந்தகை.
சென்னை : தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி விடவேண்டும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மொழியையும், அய்யன் திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் ஜேபி நட்டா என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை விடுத்துள்ளார்.

நட்டா பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் 9 மாவட்ட பாஜக கட்சி அலுவலகங்கள் காணொலி காட்சி மூலம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் நட்டா, தமிழ் மொழி, கலாசாரம், மக்கள் மீது மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் கற்றுத்தரவேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது உரையை தொடங்கும்போது, திருக்குறள், சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை மேற்கொள் காட்டியே மோடி பேச தொடங்குகிறார். தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்" எனப் பேசினார்.

காங்கிரஸ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காகப் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ் மொழிதான் தொன்மையான மொழி என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழ் அறிஞர்களை, ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை அமைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தமிழுக்கு எதிராக பாஜக
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவினர், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நெல்லையில் முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்றும், சமஸ்கிருதத்தில்தான் நடத்தவேண்டுமென்று அடாவடியில் ஈடுபட்டு எதிர்த்தரப்பு கருத்துக் கூறியவர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

வெற்று வேஷம்
கூட்டத்தில் பங்கேற்ற ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவத்தை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசியுள்ளனர். கருத்துக் கேட்புப் படிவங்களை கிழித்தெறிந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் பாஜகவினர். பிரதமர் மோடி தமிழின் மேன்மை குறித்து பேசுவது வெறும் வெற்று வேசம். தமிழை அனைத்து துறைகளிலும் ஒழித்துக் கட்டுவதே பா.ஜ.கவினரின் நோக்கம். சமஸ்கிருத மொழிக்குத்தான் நிதிநிலை அறிக்கையில் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மன்னிக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டில் பாஜக எவ்வாறேனும் காலூன்றி விடவேண்டும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ் மொழியையும், அய்யன் திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா. ஆனால், தமிழ்மொழி விரோதிகளான பாஜக கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்" என செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications