காங்கிரஸ் செய்த வரலாற்று பிழைகள். தமிழகம்.. உபி.. பீகார்.. ஆந்திராவை மொத்தமாக இழக்க 'ஷாக்' காரணங்கள்
சென்னை: இந்தியை கொண்டு வந்ததால் தமிழகத்தை இழந்த காங்கிரஸ், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தாமல் ஒதுக்கியதால் உபி பீகார் உள்ளிட்ட மாநிலங்களை மொத்தமாக இழந்தது. இதேபோல் தெலுங்கானாவை உருவாக்கி ஆந்திரா தெலுங்கானாவை இழந்துள்ளது. இப்படி காங்கிரஸ் செய்த வரலாற்று தவறுகளை இப்போது பார்ப்போம்.
சுதந்திரம் அடைந்த பின் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தான் ஆண்டு வந்தது. கேரளாவில் மட்டும் மற்றொரு தேசிய கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆண்டனர். ஆனால் 1967ம் ஆண்டில் இருந்துதான் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது என்று சொல்லலாம்.
ஆம் அதற்கு விதை போட்ட மாநிலம் என்றால் தமிழகம் தான். 1965ம் ஆண்டு இந்தியை கட்டாயமாக்க நேரு எடுத்த அதிரடி முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்காக பலர் தீக்குளித்தனர்.

இந்தியை திணித்தது
இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு அன்றைக்கு மாணவர்களாக இருந்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இதன் காரணமாக அடுத்து 1967ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் முதல்முறையாக காங்கிரஸ் ஒரு மாநில கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அதன்பிறகு தமிழகத்தைப் போல் 1977ம் ஆண்டு மேற்கு வங்கத்தை கம்யூனிஸ்டு கட்சிகளிடம் மொத்தமாக பறிகொடுத்த காங்கிரஸ் இன்று வரை அங்கு எழுந்திருக்கவே இல்லை.

உபி பீகாரை இழந்தது
1990களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த மறுத்த காரணத்தால் ( பிரதமராக இருந்த விபி சிங் கொண்டுவந்தார்) உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்டளை முழுமையாக இழந்தது காங்கிரஸ். அதேநேரம் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் பாஜக உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலமாக பாஜக அசுர வளர்ச்சி அடைந்தது.

வளர்ந்த இந்துத்துவா சித்தாந்தங்கள்
குறிப்பாக இந்துத்தவா சித்தாந்ததங்கள் 1990களுக்கு பிறகே வடமாநிலங்களில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்க ஆரம்பித்தது. அதற்கு காரணம் மாநில செல்வாக்கு உள்ளவர்களை வளரவிடாமல் காங்கிரஸ மேலிடம் கட்டுப்படுத்த நினைத்ததுதான்.

வலிமை இல்லா முதல்வர்கள்
இதில் மிக சமீப கால தவறு என்றால் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர் ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்த பின்னர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்காமல் அவமானம் செய்தது. அதேநேரம் காங்கிரஸ் வலிமையான மாநில தலைவராக இருந்த ஜெகனை சிறையில் அடைத்துவிட்டு மேலிடத்திற்கு கட்டுப்பட்டு எதையும் செய்யக்கூடியவ்ரகளை முதல்வராக நியமித்தது.

வரலாற்று தவறு
இந்நிலையில் ஆந்திராவில் வலிமையான முதல்வர் இல்லாத அந்த சூழலில் நீர் பூத்த நெருப்பாக இருந்த தெலுங்கானா பிரச்சனையை மீண்டும் கிளப்பினார் சந்திரசேகர் ராவ் . இந்த பிரச்சனை விஸ்வரூம் எடுக்கும் வரை அமைதியாக இருந்த காங்கிரஸ் அதன்பிறகு தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக ஆந்திராவை பிரித்தது இதனால் இரண்டு மாநிலங்களிலும் 2014ம் ஆண்டு ஆட்சியை மொத்தமாக காங்கிரஸ் பறிகொடுத்துவிட்டது. அங்கு எழ முடியாத அளவுக்கு வீழ்ந்துகிடக்கிறது.

பாஜகவின் தேர்தல் யுக்திகள்
இப்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தல்களில் பாஜகவிடம் மிகமோசமாக தோற்றுள்ளதற்கு காரணம், வடமாநிலங்களில் மக்களின் மனநிலையை காங்கிரஸ் புரிந்து கொள்ளாதது மற்றும் பாஜகவின் தேர்தல் யுக்திகள் ஆகியவற்றை கூறலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் செய்த தவறு என்றால் சுதந்திரமாக மாநில தலைவர்களை செயல்பட விடாமல் தடுத்தது, ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் இடையேயான பிரச்சனைகளில் அரசியலுக்காக தைரியமான நிலைப்பாடு எடுக்காதது உள்ளிட்டவைதான் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications