புத்திசுவாதினம் இல்லாமல் பேசும்.. சீமானுக்கு நாவடக்கம் தேவை.. செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
சென்னை: சிறுபான்மையினரைப் பிடிக்காது, தலித்துகளைப் பிடிக்காது, காங்கிரஸ் கட்சியைப் பிடிக்காது என்று வாய்க்கு வந்ததை புத்திசுவாதினம் இல்லாமல் சீமான் பேசி வருவதாகவும் அவருக்கு யாரைப் பற்றிப் பேசுகிறோம் எனத் தெரிந்து நாவடக்கத்துடன் பேச தெரிந்திருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை சாடியுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அப்படிக் கடந்த வாரம் உபி-இல் மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் முடிந்த பிறகு விவசாயிகள் திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது அமைச்சரின் கார் உட்பட 3 கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

உபி வன்முறை
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திய காரை மத்திய அமைச்சரின் மகனே ஓட்டி வந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக அழுத்தம் அதிகரிக்கவே நீண்ட தாமதத்திற்குப் பிறகு அமைச்சரின் மகனைச் சனிக்கிழமை உபி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் போராட்டம்
இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் மவுன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், "உத்திரப் பிரதேச மாநிலத்தில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டதைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்களைக் காப்பற்ற வேண்டும்
உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். பாஜக இந்த சம்பவத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றே கூறுகிறது. தற்போது பாஜக இணை அமைச்சரின் மகன் இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சரியான பாதையில் விசாரணை நடக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் இந்த பிரச்சனை தொடர்பாகக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க உள்ளார். பாஜகவிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றமும், குடியரசுத் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமான்
நேற்று முளைத்த காளானாக இருக்கும் கட்சியை வைத்து சீமான் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்ததைக் கண்டிக்கிறோம். சீமான் காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களை விடப் பெரியவர் போலவும் அவர்களை விடத் தான் புத்திசாலி என நினைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து வருகிறார். சீமான் யாரைப் பற்றிப் பேசுகிறோம் எனத் தெரிந்து நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

உளறுகிறார்
சிறுபான்மையினரைப் பிடிக்காது, தலித்துகளைப் பிடிக்காது, காங்கிரஸ் கட்சியைப் பிடிக்காது என்று வாய்க்கு வந்ததை புத்திசுவாதினம் இல்லாமல் பேசி வருகிறார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைப் பற்றி விமர்சித்தால் ஏற்கனவே நடந்த போராட்டங்களைப் போல ஆர்ப்பாட்டங்களை நாங்களே முன்னெடுத்து நடத்துவோம்" என அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications