முதலமைச்சரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் வந்த காங்கிரஸ் MLAக்கள்! டீ, சுண்டல் தான் மிச்சம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் பார்க்க வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டீயும், சுண்டலும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய நிகழ்வு நடந்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள் முன் கூட்டியே முதல் நாளோ அல்லது சந்திக்க வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரோ முறைப்படி அப்பாயிண்ட்மெண்ட் கேட்பது வழக்கம். அப்போது தான் தன்னை யார் யார் சந்திக்க வருகிறார்கள், யார் யாருக்கு என்னென்ன நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கும் தெரியும். ண்ட்மெண்ட் வாங்காமல் வந்

ஆனால் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சரை பார்க்க தலைமைச் செயலகம் வந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றனர். காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகமே வரவில்லை. முகாம் அலுவலகத்தில் இருந்தவாறு நிர்வாகப்பணிகளை மேற்கொண்டார். முதல்வர் தலைமைச் செயலகம் வருகிறாரா இல்லையா என்ற தகவலை கூட விசாரிக்காமல் அவரை பார்க்க புறப்பட்டு வந்தார் கே.எஸ்.அழகிரி.
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரிடம் வழங்குவதற்காக தான் அழகிரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர். காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை முதலமைச்சர் ஸ்டாலின் வருவார் எனக் காத்திருந்த கே.எஸ்.அழகிரி, அதன்பிறகு முதல்வர் வர வாய்ப்பில்லை என்ற தகவலை அதிகாரிகள் மூலம் உறுதி செய்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனிடையே முதல்வர் வருகைக்காக தலைமைச் செயலகத்தில் உள்ள காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை அறையில் காத்திருந்த கே.எஸ்.அழகிரிக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு டீயும், சுண்டலும் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்டுவிட்டு அனைவரும் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்த தகவல் முதல்வருக்கும் தாமதமாக தான் தெரிந்திருக்கிறது. மற்றொரு நாள் முதல்வர் தரப்பில் கே.எஸ்.அழகிரிக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications