Jothimani Vs Nagarajan: "கல்லால் அடிப்பேன்".."கேவலமான பெண்".. ரெண்டுமே தப்புதான்.. கடிவாளம் அவசியம்!
யாராக இருந்தாலும் வார்த்தைகளில் கண்ணியம் அவசியமாகிறது
சென்னை: "கல்லால் அடிப்பேன்" என்று ஜோதிமணியும் சொல்லி இருக்க கூடாது.. "நீ கேவலமான பெண்" என்று நாகராஜும் சொல்லி இருக்கக்கூடாது.. இருவர் மீதும் தவறு இருந்தாலும், வார்த்தை பிரயோகம் எந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுவிடும் என்ற விபரீதத்தை இருவருமே புரிய வைத்துள்ளனர்.
Recommended Video
நேற்று நியூஸ் 7 டிவி நிகழ்ச்சியில் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பிரச்சினை பற்றிய விவாதத்தில், ஜோதிமணி பேசும்போது, பிரதமர் மோடியை தாக்கி பேசியிருந்தார்.
அதேபோல, பாஜகவின் சார்பில் பங்கேற்ற கரு.நாகாஜன் "நீ கேவலமான பெண்'' என்று ஜோதிமணியை விமர்சித்து பேசினார். இது தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

அறிக்கை
இந்த விஷயத்தை பொறுத்தவரை, எம்பி ஜோதிமணியின் மன உணர்வை நம்மால் உணர முடிகிறது.. அவரது காயம்பட்ட வலியையும் அவர் விடுத்திருந்த அறிக்கை மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.. அதேசமயம் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று கூறியிருக்க கூடாது.. மோடியை நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ அவர்தான் நம் பிரதமர்.. மக்கள் அவரைதான் தேர்ந்தெடுத்துள்ளனர்.. அவர் சொல்படிதான் நாட்டு மக்கள் நடந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

வார்த்தை
அந்த வகையில் பிரதமர் என்ற உயர்ந்த பதவிக்கு உரிய மரியாதை அளித்து ஜோதிமணி பேசியிருக்கலாம்.. தடித்த வார்த்தையை உபயோகித்திருக்காமல், உரிய, சரியான, நேரடியான, அழுத்தமான கருத்தை ஜோதிமணியால் நிச்சயம் எடுத்து வைத்திருக்க முடியும்.. அந்த அளவுக்கு அவருக்கு திறமையும், துணிச்சலும் உள்ளது. அதனால் பிரதமரை அந்த வார்த்தையில் ஒரு எம்பியாக இருந்து கொண்டு அவர் சொல்லியிருக்க கூடாது.

தமிழிசை சவுந்தராஜன்
அதேசமயம், நாகராஜ் பேசியதை மன்னிக்கவே முடியாது.. ஜோதிமணி பெண் என்பதை காட்டிலும் அவர் ஒரு தொகுதியின் எம்பி.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு சென்றிருப்பவர்.. எடுத்த எடுப்பிலேயே வார்த்தையை கொட்டிவிட்டது நாகராஜ்-க்கு மட்டும் பாதிப்பை தரவில்லை.. அவர் சார்ந்த கட்சியையேயும் சேர்த்து இழிவுபடுத்தி உள்ளது.. இதற்கு முன்பு ஜோதிமணிக்கும், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தராஜனுக்கும் ஏராளமான கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.

அரசியல் நாகரீகம்
இருவரும் நேரம் காலம் பார்க்காமல் ராத்திரி 1 மணி வரை ட்விட்டரில் சண்டை போட்டு கொண்டும் இருந்த காலம் உண்டு. அப்போதுகூட இரு பெண்களுமே எல்லை மீறி விமர்சித்து கொள்ளவில்லை.. அதில் ஒரு அரசியல் நாகரீகம் இருந்தது.. "உனக்கு நான் சளைத்தவர் இல்லை" என்பதை இரு பெண்களுமே தங்கள் பதிவுகளில் நிரூபித்தனர்.. இரு பெண்களுமே கருத்தியல் ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டனர்.. தமிழிசையிடம் ஒரு கண்ணியம் இருந்தது.. அதே கண்ணியத்தை ஜோதிமணியும் கடைப்பிடித்திருந்தார்.

வலி வார்த்தைகள்
இன்று அதே பாஜகவுக்கு நாகராஜ் போன்றோரால் இழிபெயர் ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது.. ஆயிரம் முரண்பாடுகளும், லட்சம் விமர்சனங்களும் இருந்தாலும் சரி, அவை எல்லாவற்றையும் தீர்மானிப்பதும், நிலைநிறுத்துவதும் அவர்கள் வெளிப்படுத்தும் வலிய வார்த்தைகள்தானே தவிர, வலி நிறைந்த வார்த்தைகள் அல்ல!












Click it and Unblock the Notifications