திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்.. திருச்சி சிவாவுக்கும் பதிலடி.. விளாசிய ஜோதிமணி
சென்னை: திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். காமராஜருக்கு ஏசி அறை அவசியம் என்று திருச்சி சிவா கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், காமராஜர் மீது தொடர்ச்சியாக பழிசுமத்தும் திமுகவின் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பலூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திருச்சி சிவா பேசுகையில், காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டங்களை நடத்தினார். ஆனால் காமராஜருக்கு ஏசி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியை செய்ய உத்தரவிட்டார்.

திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு
கருணாநிதியின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன் அப்போதைய முதல்வரான கருணாநிதியின் கைகளை பிடித்து கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார். திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் கடுமையான கண்டனமும், பதிலடியும் அளிக்கப்பட்டு வருகிறது.
ஜோதிமணி பதிலடி
அந்த வகையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில், காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர்போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் காமராஜர்.
மரத்தடியில் உறங்கியவர் காமராஜர்
அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திருச்சி சிவா சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது.
திமுக பரப்பிய கட்டுக்கதைகள்
அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால், காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது.
திமுகவின் போக்கு
அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும் அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து ஜோதிமணி பேசுகையில், காமராஜர் பற்றி திருச்சி சிவா சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காமராஜர் மீது தொடர்ச்சியாக பழிசுமத்தும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறந்த பின்பும் குற்றச்சாட்டு
2 மாதங்களுக்கு முன்பாக தான் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி காமராஜர் மீது பழியை சுமத்தினார். வாழும் காலங்களிலும் காமராஜர் மீது இதுபோன்ற பழியை சுமத்தினார்கள். இறந்த பின்னரும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ்காரர்களாக இது எங்களுக்கு உணர்ச்சிமிக்க விஷயம்.
கூட்டணி வேறு
காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கூட்டணி என்பது வேறு.. கட்சியின் தலைவர்களை அவமதிப்பது வேறு.. திருச்சி சிவாவின் கருத்துகளுக்கு திமுகவும் எதிர்வினையாற்ற வேண்டும். இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications