திமுகவை சீண்டிய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி.. பாய்ந்து வந்த ஜோதிமணி எம்.பி!
சென்னை: உத்தர பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது என ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி, "அதிமுக ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

இதனை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ஆம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது.
வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்று பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு எதிராக கரூர் எம்.பி ஜோதிமணி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், நிறுவனமயமான ஆட்சிக்கு பதிலாக 'புல்டோசர் ராஜ்' மாடலை ஊக்குவித்து, பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது.
கடன் சுமையை அதன் விளைவுகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக இருந்தாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது. ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக நிதியைப் பெறுகின்றன. இயற்கை சீற்றங்களின்போதும், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களின்போதும் கூட, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிகள் மறுக்கப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, நாம் கடன் குறித்து விவாதிப்போம், ஆனால் சரியான பின்னணியுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் வருமானக் குறியீடுகள், வரிப் பங்களிப்பு மற்றும் நிதிப் பகிர்வு, மற்றும் ஆட்சியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம். இந்த அளவுகோல்களின்படி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வெகு தூரத்தில் முன்னணியில் உள்ளது. எனவே நமது தமிழ்நாட்டை தாழ்த்த வேண்டாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications