கொரோனா தடுப்பு பணிகளை விட்டுவிட்டு... யார் ஆட்சியை கவிழ்க்கலாம் என்பதிலேயே மோடி கவனம் -காங்கிரஸ்
சென்னை: கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பிரதமர் மோடி, அதற்கான பொறுப்பை தட்டிக் கழித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.
இந்திய அறிவியல் கழகம் அபாய சங்கு ஊதியும் அதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பொறுப்பு துறப்பு
இந்திய நாட்டு மக்களின் உயிரை உலுக்கிக் கொண்டிருக்கிற கொடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பிரதமர் மோடி, அதற்கான பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தி, தட்டிக் கழிப்பதை விட ஒரு பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆட்சியை கவிழ்க்க
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் பாதிப்பை உணர்ந்த மத்திய அரசு, அதை எதிர்கொள்வதற்கான சுகாதார கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்யவில்லை. அதன் விளைவாக இன்றைக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு, வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை என, நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் தொடர்ந்து மடிந்து வருகின்றன. ஆனால், பா.ஜ.க.வின் முன்னுரிமையோ மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை அகற்ற வேண்டும், மகாராஷ்டிராவில் ஆளுகிற பா.ஜ.க. அல்லாத ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதுதான்.

புதிய தடுப்பூசி கொள்கை
136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுகிற முதன்மைப் பொறுப்பை, கடந்த காலங்களில் காலரா, அம்மை, போலியோவை ஒழிப்பதில் மத்திய அரசுகள் ஏற்றதைப் போல, இன்றைய மத்திய பா.ஜ.க. அரசும் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அதை ஏற்பதற்கு மாறாகக் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி புதிய தடுப்பூசி கொள்கையை மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் அறிவித்தது.

பாரபட்சம்
அதேநேரத்தில் மத்திய அரசுக்கு வழங்குகிற தடுப்பூசியின் விலை ரூ.150. ஆனால், மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிற விலை ரூ.400. இதன்படி 60 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட ரூபாய் 24,000 ஆயிரம் கோடிக்கான நிதிச்சுமை மாநிலங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்திய மக்களால் பதவியில் அமர்த்தப்பட்ட பிரதமர் மோடி, இத்தகைய பாரபட்சத்தை மக்கள் மீது காட்டுவது ஏன் ?

பின்தங்கியிருப்பது ஏன் ?
உலக உற்பத்தியில் 60 சதவிகித தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட பா.ஜ.க.வினர், இந்திய மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் பின்தங்கியிருப்பது ஏன் ? கொரோனா நோயாளிகள் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் ஆக்சிஜன் தேவையை உணர்ந்து அதற்கான உற்பத்தியைப் பெருக்குவதற்கு கடந்த ஓராண்டு காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த முயற்சிகள் என்ன ?

அறிவியல் கழகம்
கொரோனா பாதிப்பு என்பது மே 8 ஆம் தேதி வாக்கில் 4.4 லட்சத்தை அடையும் இந்திய அறிவியல் கழகம் அபாய சங்கு ஊதியுள்ளது. அதேபோல, மனித உயிரிழப்புகளும் பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை எச்சரிக்கையாகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications