திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுமா? செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக காங்கிரஸ் தலைமையே முடிவு செய்யும் என்று கூறிய அவர், அதிமுக திராவிட கட்சியே இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவுடன் எந்தவித மோதலையும் பின்பற்றாமல், அமைதி காத்து வருகிறது. அதேபோல் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.

காங்கிரஸ் ஆலோசனை
அதே கருத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இம்முறை எத்தனை தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், பீட்டர் அல்போன்ஸ், சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கிராம கமிட்டி முதன்மை பயிற்சியாளர்கள் 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் தொகுதியில் போட்டி?
அவர்கள் 12,525 பஞ்சாயத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் முழுமை பெறும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை. காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் கூடுதல் தொகுதிகளை கேட்டது அவரின் கருத்தாகும். தமிழக காங்கிரஸ் கட்சியின் வலிமையை தலைமைக்கு தெரியப்படுத்துவோம்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி
தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு உள்ளிட்டவை குறித்து தலைமை முடிவு செய்யும். அவர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் சொல்ல முடியாது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மனசாட்சியாகவே நான் செயல்படுவேன். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர், பாஜக எழுதி கொடுப்பதை பேசி வருகிறார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா காலத்திலேயே கோயில் நிதியில் இருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள்.
ஜெயலலிதாவை திட்டியவர்கள்
அதனை திமுக ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். அதிமுக திராவிட கட்சியே கிடையாது. திராவிட கட்சியாக அதிமுக செயல்பட்ட காலம் எல்லாம் மலையேறி போச்சு. ஜெயலலிதாவை திட்டியவர்களுடனே அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக செல்வப்பெருந்தகையின் கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications