ஒரு பைசா தராத மோடி ஓட்டு கேக்க மட்டும் வர்றாரு! கருப்புக்கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் இன்று பயணம் மேற்கொள்கிறார். சென்னை நந்தனத்தில் பாஜக பொதுக்கூட்டம் மற்றும் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார்.

இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றுப் பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெள்ள பாதிப்புகளுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் தராத நரேந்திர மோடி வாக்கு கேட்டு தமிழ்நாடு வருகிறார். வட மாநில மக்களை ஏமாற்றியது போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று வருகிறார்.
மோடிக்கு எதிராக கருப்புக்கொடி: ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். மோடிக்கு தேர்தலில் மிகப்பெரிய தீர்ப்பை கொடுப்பார்கள். குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நீதியை கடைப்பிடிக்கிறார் பிரதமர் மோடி. மீனவர்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுகிறார். சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும்.
10 நாட்களில்.. 2வது முறையாக இன்று தமிழ்நாடு வரும் மோடி.. சென்னையில் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டம்
தமிழ்நாட்டிற்கு வந்த மோடி சொல்கிறார், 'திமுக அழிந்து விடும், காங்கிரஸ் காணாமல் போய்விடும்’ என்று. மோடி வந்தாலும் அவர் பாட்டன், முப்பாட்டன் வந்தாலும் எங்களை அழிக்க முடியாது. தேர்தலில் கடந்த முறையை விட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள்.
இந்தியா கூட்டணியின் வெற்றி நிச்சயம்: ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை நடத்தியது பேக்கேஜ் யாத்திரை. மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி. இந்தியா கூட்டணி வராது என்றார்கள். ஆனால் இப்போது ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, சிவசேனா என கூட்டணி உறுதியாகியுள்ளது. 350 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணியின் வெற்றி நிச்சயம்.
பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில், பலர் போட்டியிட மாட்டேன் என பயந்து ஓடுகின்றனர். மோடி 9 ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும். 5 தேர்தல்களாக திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். திமுக காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.” எனத் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications