விஜய்யுடன் பிரவீன் சக்ரவர்த்தி மீட்டிங்.. எங்களுக்கு எதுவுமே தெரியாது! செல்வப்பெருந்தகை பதிலால் ஷாக்
சென்னை: தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தது தொடர்பாக தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என்று கூறிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் 5 பேர் குழு திமுகவுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி அமைய உள்ளதாக பேசப்பட்டு கொண்டே இருந்தது. கரூர் விவகாரத்தின் போது விஜய்யிடம் நேரடியாகவே ராகுல் காந்தி பேசி இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் விஜய்க்கு ஆதரவாக பேச தொடங்கினார்கள். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சி தரப்பில் திடீரென 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டது. இதன்பின் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 5 பேர் கொண்ட குழு தொகுதி பங்கீடு தொடர்பான கோரிக்கை கடிதங்களை அளித்தது. இதனை ஸ்டாலின் பெற்றுக் கொண்டு, திமுக தரப்பில் குழு அமைத்த பின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி இருந்தார்.
இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதனை அவரே உறுதி செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சி பலமுனைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது பற்றியெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தரப்பில் 5 பேர் குழு அமைக்கப்பட்டு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. யார் விஜய்யை சந்தித்தார்கள் என்பதெல்லாம் தெரியாது.
அதுதொடர்பாக எந்த தகவலும் இல்லை.. விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொல்லவில்லை. இந்தியா கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. அதேபோல் திருநாவுக்கரசர் திருமண வீட்டிற்கு சென்ற போது, செங்கோட்டையன் அங்கு வந்துவிட்டார். அதனால் மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு அது.. இதை கட்சியுடன் இணைக்க தேவையில்லை.
காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதுதான்.. எங்களை திமுகவுடன் பேச அறிவுறுத்தி இருக்கிறார்கள். நாங்கள் முதற்கட்டமாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். திமுக தரப்பில் இதுதொடர்பாக விரிவாக பேசுவோம் என்று தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி அண்ணா அறிவாலயத்தை தவிர்த்து வேறு எங்கும் சென்றோமா? பிரவீன் சக்ரவர்த்தி தொடர்பாக தலைமையிடம் பேசுவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications