எல்லை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை முன்வைத்து திமுக மீது காங்கிரஸ் செம கடுப்பு
சென்னை: சீனாவுடனான எல்லை மோதல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தை முன்வைத்து திமுக மீது காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி ஒட்டுமொத்தமாக தேசத்தை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

சோனியா சரமாரி கேள்வி
இதில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அனைத்து புலனாய்வுத் தரப்பும் தோல்வி அடைந்துவிட்டதை சோனியா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் முன்வைத்தார். இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

மமதா, ஸ்டாலின் பேச்சு
ஆனால் சோனியாவை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதே பாணியை பின்பற்றவில்லை. சீனாவை விமர்சித்து பேசியதுடன் மத்திய அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தினர்.

மோடிக்கு ஆதரவு- ஸ்டாலின்
ஸ்டாலின் தமது பேச்சில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை, 1962 இந்தியா - சீனப் போராக இருந்தாலும், 1971 இந்தியா - பாகிஸ்தான் போராக இருந்தாலும், 1999-ல் கார்கில் போராக இருந்தாலும், நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம். பண்டித ஜவகர்லால் நேருவாக இருந்தாலும்; அன்னை இந்திரா காந்தியாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாயாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என பேசினார்.

திமுக மீது காங். அதிருப்தி
அரசியல் அரங்கில் பிரதமர் மோடியை வெளிப்படையாக திமுக விமர்சிக்கிறது. ஆனாலும் பாஜகவுடன் கை கோர்க்க திமுக எப்போதும் தயாராக, ஒரு சமாதானப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு இருக்கிறது என்பது காங்கிரசார் வருத்தம். காங்கிரஸ் மேலிடமும் தாங்கள் கடுமையாக விமர்சித்து பேசும் போது தங்களுக்கு கை கொடுக்க கூட்டணி கட்சிகள் அதுவும் திமுக கூட வரவில்லையே என்கிற கடுப்பில் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications