அன்று அப்பா மூப்பனார்; இன்று மகன் வாசன்! வழிவழியாக வரும் கொள்கை குழப்பங்கள்?
சென்னை: ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததைக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாஜகவுக்கும் தமாகாவுக்குமான கூட்டணி உறுதியாகி உள்ளதாக நேற்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். சொல்லப்போனால் இந்த அறிவிப்பே விநோதமானது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமாகா இருந்தது. அதன்பின்னர் ஏற்பட்ட மோதல் போக்கால் சில மாதங்கள் முன்னதாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே நிலவி வந்த சின்ன சின்ன கருத்து மோதல்கள் கடைசியில் கூட்டணிக்கே உலைவைத்தது.
அப்போதும் கூட பாஜகவின் கூட்டணியில்தான் தமாகா நீடித்து வந்தது. அந்தக் கட்சி இதற்கு முன்னர் பாஜக கூட்டணி உறவு முறிந்துவிட்டதாக எங்கேயும் சொல்லவில்லை.

ஆனாலும் தமாகா இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையுமா? என்று செய்தி போட்டு வந்தனர். அதற்கு வாசன் எந்த மறுப்பும் சொல்லவில்லை. 'நாங்கள் விலகியதாக எப்போதும் சொல்லவே இல்லையே?' என்று எதிர்க்கேள்வி கேட்கவும் இல்லை.
வழக்கம் போல் அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்கிறது என்று சொல்லி வந்தார். அந்தக் கூட்டணி பேச்சு வார்த்தை யாருடன்? பாஜகவுடனா? அல்லது அதிமுகவுடனா? என்று அவர் விளக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியைப் போய் சந்தித்தார்.

அதற்கு ஊடகங்கள் பாஜக கூட்டணிக்குள் அதிமுகவைச் சேர்ப்பதற்காக வாசன் முயற்சி செய்து வருகிறார் என்று செய்தி போட்டன. அப்போதும் அவர் எதையும் சொல்லவில்லை.
அதிமுகதான் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்தது. அப்படிப் பார்த்தால் அவர் அதிமுக கூட்டணி பக்கம்தான் சென்றிருக்க வேண்டும்.
அவருக்குத் தெரியும் அதிமுக விரும்பி அதைத் தரவில்லை. பாஜக கேட்டது. அதற்காக வாசனுக்கு ராஜ்ய சபா பதவி வழங்கப்பட்டது. ஒரு கட்சி பதவி தந்திருந்தாலும், அதற்கு மூல காரணம் பாஜகதான். மோடிதான். ஆகவே அவர் மோடியின் கரத்தை வலுப்படுத்தச் சென்றுள்ளார்.

இந்தக் கூட்டணி அறிவிப்பு வெளியானதும் மூப்பனாரின் ஆன்மா ஜிகே வாசனை மன்னிக்காது" என்று பொங்கி எழுந்து விமர்சித்துள்ளார் காங் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை.
அவர் முன்பே பாஜக கூட்டணியில்தான் இருந்தார். அப்போது அதிமுகவும் சேர்ந்திருந்தது. இப்போது அவர் தனியாக பாஜகவை ஆதரிக்கிறார் என்று வேண்டுமானால் விளக்கம் சொல்லலாம். அவர் ஏதோ புதியதாக பாஜகவை ஆதரிப்பதைப்போல் ஆவேசம் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
'பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்தவர் மூப்பனார். அவர் ஒரு போதும் பாஜக பக்கம் சென்றவர் இல்லை. அவரது கொள்கை கோட்பாடு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரானது. அவரது மகன் நீங்கள் எப்படி பாஜகவை ஆதரிக்க முடியும்?

பாஜகவுக்கு ஆதரவாக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளார். சமாதானம் பேசப் போகிறார். பாமகவிடம் பேசுகிறார். அதிமுகவிடம் பேசுகிறார். அனைவரையும் பாஜகவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார். இது எந்த விதத்தில் சரி? மூப்பனாரின் ஆன்மா அவரை மன்னிக்கட்டும்' என்று ஆவேசமாக விமர்சித்திருக்கிறார் என்றும் விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார் செல்வப் பெருந்தகை.
இதற்கு 'ஒரு கட்சியின் தலைவர் பாஜகவுக்காக மற்ற கட்சிகளிடம் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்று மறுத்துள்ளார் ஜி.கே.வாசன்.
அப்படி என்றால், அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து 'நீங்கள்தான் ராஜ்ய சபா பதவி தந்தீர்கள். நான் உங்களுடன் பயணிக்க முடியாது. பாஜகவுக்குச் செல்கிறேன் இல்லை இல்லை பாஜகவிலேயே இருந்து கொள்கிறேன்' என்று விளக்கம் அளித்து விட்டு வந்திருக்கலாம்.

அதிமுகவை பாஜக கூட்டணிக்கு அழைப்பதற்காக ஜி.கே.வாசன் தூது வரவில்லை. அது தவறான தகவல் என உறுதிசெய்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் வாசன், 'வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணிக்குச் சென்றுள்ளோம். 10 ஆண்டுகாலம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள பாஜக ஆட்சியை மீண்டு 2வது முறையாக நாங்கள் ஆதரிக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகையை அடுத்து காங்கிரஸ் செல்வக்குமார் எம்பி, "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியா? அப்படி ஒரு அரசியல் இயக்கம் தமிழ் நாட்டில் இருக்கிறதா? ஆளே இல்லாத கட்சிகள் சேர்ந்து கூட்டணி போட்டுள்ளன. அதற்கு ஏதேனும் முக்கியத்துவம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை" என்று விமர்சித்துள்ளார்.
இதில் இன்னும் உச்சகட்ட காமெடி என்னவென்றால் தமாகாவின் தலைமை நிலையச் செயலாளர் அசோகன் கட்சியைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு ஒன்று புரியவில்லை, முன்பே அவர் கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக கூட்டணியிலிருந்த தமாகாவில் தான் பொறுப்பிலிருந்துள்ளார் என்பது. முன்பே தான் தலைமுறையாகக் காங்கிரஸ்காரன் என்று கூறி அவர் வெளியேறி இருக்கிறார். அப்படி என்றால் 10 ஆண்டுகாலம் உறக்கத்திலிருந்தாரா எனப் புரியவில்லை?
தமாகாவில் உள்ள சில முக்கிய தலைவர்கள் அதிமுக பக்கம் தாவ உள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது என்றும் சிலர் பேசுகிறார்கள். அதில் முக்கிய தலைவர்கள் என்று யாருமே இல்லை. இருந்தால்தானே தாவ முடியும்? என்று அவர்களுக்கு யார் புரிய வைக்கப்போகிறார்களோ?
தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கு உள்ள தலைவர் இல்லை வாசன். அவரின் செல்வாக்கு தஞ்சாவூரில் வட்டாரத்தில் கூட இன்று உள்ளதா என்பது சந்தேகமே என்கிறார்கள் சிலர்.
2019இல் வாஜ்பாய் கூட்டணியில் திமுக சேர்ந்தபோது, தமிழ்நாட்டில் அக் கூட்டணியிலிருந்த ஜிகே வாசனின் தந்தை மூப்பனார் அதனை எதிர்த்துத் தனிக் கூட்டணி அமைத்தார்.
அப்போதுதான் முதன்முதலாகத் தேர்தல் பாதைக்கு விசிக வந்தது. தேர்தல் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த திருமாவளவனைத் தேர்தல் பாதைக்குள் திருப்பிவிட்டவர் மூப்பனார்தான். அதற்குக் காரணம் பாஜக எதிர்ப்பு.
அதன் பின்னால் வந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்குப் போனார் மூப்பனார். அதிமுகவை எதிர்த்து கட்சி தொடங்கிய அவர் மீண்டு அதிமுகவுக்குள் ஐக்கியமானார்.
இதற்கு அவர் சொன்ன காரணம் பாஜக எதிர்ப்பு. இப்படி பாஜகவை எதிர்த்த அவரது தந்தையின் கொள்கைக்கு விரோதமாக வாசன் சென்றுள்ளதால்தான் அவர் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
அதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ஜெயலலிதாவுடன் வைத்ததை எதிர்த்துத்தான் தமாகாவை தொடங்கினார் மூப்பனார். மீண்டும் அடுத்த தேர்தல் வந்த போது அவர் எதிர்த்த ஜெயலலிதாவிடமே சரணடைந்தார்.
அன்று அவர் அப்பா செய்தார். இன்று அவர் மகன் செய்கிறார்.
-
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர் -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி












Click it and Unblock the Notifications