கோயம்பேடு அல்ல.. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இனி இந்த ஊர்களுக்கு பஸ்கள் கிளம்பும்.. தீவிர ஆலோசனை
சென்னை: கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை நாட்களில் கடும் நெரிசல் ஏற்படுவதால் வெளியூர் செல்பவர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இதனை தடுக்கும் வகையில், வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னையை சுற்றி இருக்கும் பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.393.74 கோடியில் கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசு புறநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகள் என அனைத்தும், ஒரே இடத்தில் இருந்து இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் முதல் இந்தப் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது.

நவீன பேருந்து நிலையம்
மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில், நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைதளம், முதல் தளம் என கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், இரண்டாவது அடித்தளத்தில், 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏன் தாமதம்?
சுமார் 14 ஏக்கரில் கட்டப்படும் பேருந்து நிறுத்துமிடத்தில், ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 தனியார் தனியார் பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் அனைத்து கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. சுமார் 60 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கட்டுமான பணிகளில் தாமதமாவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விமான நிலையம் வரை செல்லும் ப்ளூ லைன் மெட்ரோ ரயில் வசதி கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட உள்ளது.

விரைவில் மெட்ரோ சேவை?
இதனிடையே சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த வழித்தடத்தில் 12 மெட்ரோ நிலையங்களை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு சில மாதங்களுக்கு முன் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம், சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கிளாம்பாக்க பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதேபோல் பயணிகளுக்கு தடையின்றி பேருந்து வசதிகள் கிடைப்பது, போக்குவரத்து வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications