இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்
சென்னை: கடந்த 2014-ஆம் ஆண்டு தெற்கு இந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் ஒன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்து எந்த தகவலையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நடந்து வரும் விமான விபத்துகளால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் விமானம் ஒன்று சென்றது. அது இந்திய பெருங்கடலில் கடந்த 2014-ஆம் ஆண்டு விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 26 நாடுகள் தேடியும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானத்தை விமானியே தற்கொலை செய்யும் நோக்கில் கடலில் செலுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு இன்று 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விமானம் ஜாவா தீவில் உள்ள கடற்பகுதியில் விழுந்துள்ளது. இதில் இருந்த 168 பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து தேடல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பப்புவா மாகாணம்
இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணம் தனாவில் இருந்து ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று கடந்த ஆகஸ்டில் பயணம் செய்தது. அப்போது விமானம் ஒக்சிலில் தரையிறங்குவதற்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு இழந்து மாயமானது. பின்னர் விசாரணையில் அது மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகிவிட்டனர்.
13 பேர் பலி
இந்தோனேஷியா ராணுவ விமானம் ஹெர்குலஸ் சி - 130 விமானம், திமிகா என்ற இடத்தில் இருந்து வாமேனா என்ற இடத்திற்கு உணவு பொருட்களை எடுத்து சென்ற போது பப்புவா மாகாணத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 3 பைலட்டுகள், 10 ஊழியர்கள் என 13 பேர் பலியானார்கள்.
விபத்தில் சிக்கியது
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்து பப்புவா புறப்பட்ட பயணிகள் த்ரிகானா விமானம் காணாமல் போன நிலையில் அது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த விமானத்தில் பயணித்த 54 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 5 விமான ஊழியர்களும் இறந்துவிட்டனர்.
140 பேர் பலி
அதுபோல் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 192 பயணிகளுடன் பயணம் செய்த ஏர் ஏசியா விமானம் ஜாவா தீவுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் ராணுவ விமானம் ஒன்று சுமத்ரா தீவுகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் விபத்துக்குள்ளானதில் 140 பேர் பலியாகிவிட்டனர்.
கடலில் விழுந்து விபத்து
இதுபோல் இந்தோனேஷியாவில் தொடர்ந்து விமானங்கள் மாயமாவதும் பின்னர் கடலில் அல்லது மலையில் விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகியுள்ள நிலையில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.