"நான் கையெழுத்து போடலை.. நீட் விலக்கு மசோதா செத்து போச்சு".. ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு தாம் கையெழுத்து போட்டு ஒப்புதல் தராததால், அந்த மசோதாவே செத்துப் போய்விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியது பெரும் சர்ச்சையானது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் தந்து அதிரடி பதிலடியை தந்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி, 2021-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி பொறுப்பேற்றார். முன்னதாக நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்தார் ஆர்.என்.ரவி. அந்த மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட போது, நாகாலாந்து மாநில மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கு காரணம், நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியாக நடைபெற்ற போதும், அரசு நடவடிக்கைகள் மிக மோசமான தலையீடுகளை மேற்கொண்டிருந்தார் ஆர்.என்.ரவி என்பதுதான்.

rn ravi mk stalin neet

அத்தனையும் சர்ச்சைகளே..

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற காலம் முதலே தொடர்ச்சியான சர்ச்சைகளில்தான் சிக்கி வருகிறார். திராவிடர் இயக்க எதிர்ப்பு, இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, சனாதன தர்ம ஆதரவு என தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் மிக மோசமான எதிர் நிலைப்பாடுகளையே கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சில ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர் இயக்கத்தை எதிர்த்து அவர் கொடுத்த பேட்டியைத்தான் இன்றைக்கும் ராஜ்பவனின் எக்ஸ் பக்கத்தில் இடம் பெறச் செய்திருக்கிறார்.

நீட் விலக்கு மசோதா

தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது; இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனால் மீண்டும் தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புதல் தராமல், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ரவி.

மசோதாக்கள் செத்துப் போச்சு விமர்சனம்

அத்துடன் நிற்கவில்லை.. ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராவிட்டால், அந்த மசோதா இறந்துவிட்டதாகவே அர்த்தம் என்று கிண்டலடித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், சரியான காரணமே இல்லாமல் ஒரு மசோதாவை ஆளுநர் நிராகரித்தால் நாடாளுமன்ற ஜனநாயகமே இறந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்றும் பதிலடி தந்திருந்தார். உச்சநீதிமன்றமும் கூட, ஆளுநர் ஒப்புதல் தராமல் போவதாலேயே ஒரு மசோதா இறந்துவிடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது.

மஞ்சள் காமாலை பார்வை

அத்துடன் நிற்கவில்லை.. தமிழ்நாடு சட்டசபையின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிய கோப்பில், தமிழ்நாடு அரசின் ஏகே ராஜன் குழுவின் அறிக்கையை மஞ்சள் காமாலை பார்வை எனவும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் ஆளுநர் ரவி.

கையெழுத்தே போட மாட்டேன்

பின்னரும் கூட, தாம் ஒரு போதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரும் கையெழுத்தைப் போடவே மாட்டேன் என அடம்பிடித்து அப்போதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார் ஆளுநர் ரவி.

சனாதன தர்மம் ஆதரவு

இதேபோல சனாதன தர்மத்தை இடைவிடாமல் ஆதரித்து பேசியதுடன் சனாதன தர்மத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த வள்ளலாரையும் தனி மதம் கண்ட அய்யா வைகுண்டரையும் சனாதன தர்மத்தைப் பாதுகாத்தவர்கள் என பேசியும் சர்ச்சையில் சிக்கினார் ஆளுநர் ரவி.

பொன்முடி, செந்தில் பாலாஜி விவகாரங்கள்

தமிழ்நாடு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி விவகாரங்கள், மாநிலத்தின் முதல்வருக்கான அதிகாரத்தில் தலையிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒரு மாநில அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கான அதிகாரம். ஆனால் செந்தில் பாலாஜியும் பொன்முடியும் அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என சுற்றறிக்கைகளை அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய போது சுற்றி வளைத்த போது கைது செய்யப்பட்டார்; அப்போது, இதை பயங்கரவாத செயல்; தீவிரவாத செயல்; நாசவேலைகளுக்கு சதி என்றெல்லாம் ஆளுநர் மாளிகை அதீதமாக அறிக்கைகளில் பேசியது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சியோ, ராஜ்பவன் அறிக்கையில் இடம் பெற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே நிராகரித்து நோஸ் கட் கொடுத்தது.

விளாசித் தள்ளிய உச்சநீதிமன்றம்

தற்போது, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகளில் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது; சட்டவிரோதம் என்று அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது உச்சநீதிமன்றம். அத்துடன் ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து, தமக்கான சிறப்பு அதிகாரம் மூலம் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. இதன் உச்சமாக, ஆளுநர் ரவி அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகளையும் கூட உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.

ஆளுநர் ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இதனால்தான் ஆளுநர் ரவி தார்மீக ரீதியாக, தமது பதவியில் இருந்து விலகியாக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியில் இருந்து விலகி ராஜ்பவனை விட்டு வெளியேறக் கோரி தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+