நானே கடவுள் அவதாரம்- ஜூனியர் நித்தியானந்தாவாக மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு-எந்த தீவு வாங்குவாரோ?
சென்னை: போலி சாமியார்கள் அப்பாவி பொதுமக்களை நம்ப வைக்க தாமே கடவுள்; தாமே கடவுளின் அவதாரம் என பிரசங்கம் செய்வது வழக்கம்தான். அண்மைக் காலத்தில் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பி ஓடிய நித்தியானந்தா, தாமே சிவன் என இன்னமும் அழைத்துக் கொண்டிருக்கிறார். நித்தியானந்தா பாணியில் தம்மை மகா விஷ்ணு; விஷ்ணுவின் அவதாரம் என பிரசங்கம் செய்து வருபவர்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் மூடநம்பிக்கைப் பேச்சாளர் மகா விஷ்ணு.
சிறுவயதில் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னர் டிவி புகழ் வெளிச்சத்தில் ஆன்மீகப் பக்கம் திரும்பியிருப்பவர்தான் மகா விஷ்ணு. பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் திருப்பூரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அத்துடன் பிரசங்கம் என்ற பெயரில் பக்தர்களிடம் ரூ10,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்.

சிஷ்ய கோஷ்டிகள்: அரசு பள்ளிகளில் குறிப்பாக பெண்கள் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை விதைத்து மூளைச்சலவை செய்து வருகிறார் மகா விஷ்ணு. இவருக்கும் சிஷ்ய கோஷ்டிகள் இருக்கின்றனர். இப்படித்தான் சென்னை அசோக்நகர் பெண்கள் பள்ளியில் பிரசங்கம் போய் வசமாக சிக்கி இருக்கிறார் மகா விஷ்ணு.
ஒரு நிமிடம்.. இந்த கடவுள் அவதாரம்.. பிரசங்கம், சிஷ்ய கோஷ்டிகள் இவை அனைத்தும் எங்கோ கேட்டது போல் உங்களுக்கு இருக்கிறதா? ஆம் நாடே அறிந்ததுதான்.. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இப்படித்தான் வலம் வந்தார். திருவண்ணாமலையில் கிரிவல வீதியில் கேட்பாரற்ற சாதுவாக இருந்த நித்தியானந்தா இன்று தனித் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என்ற தனிநாட்டையே அமைத்துவிட்டதாக புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்.
நித்தியானந்தா பாணி: அப்படியே நித்தியானந்தா பாணியில் தம்மை கடவுளின் அவதாரம் என கதைவிட்டு அப்பாவி பொதுமக்களை குறிப்பாக பெண்களை மூளைச்சலவை செய்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் இந்த மகா விஷ்ணு. நித்தியானந்தா வார இதழில், கதவைத் திற காற்று வரட்டும் என தொடர் எழுதி சிஷ்யைகளை தம் பக்கம் இழுத்தார். இந்த ஜூனியர் நித்தியானந்தாவோ, ஒவ்வொரு அரசு பள்ளியாக சென்று மாணவிகளை மூளைச் சலவை செய்து வருகிறார்.
டார்கெட் ஆஸ்திரேலியா: நித்தியானந்தா பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கி இந்தியாவை விட்டே தப்பி ஓடினார். ஆனால் உஷாராக இருக்கும் மகாவிஷ்ணு, அடிக்கடி வெளிநாட்டு பயணம் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிகம் முகாமிடுகிறார். நித்தியானந்தா விலைக்கு வாங்கிய தீவு கூட ஆஸ்திரேலியாவுக்கு அருகேதான் என்கிற தகவலும் உண்டு.
வெளிநாட்டில் கிளை: நித்தியானந்தா போலவே வெளிநாடுகளிலும் கிளைகளைத் தொடங்கி இருக்கிறார். Paramporul Yogam Pty Ltd என்ற பெயரில் அண்மையில்தான் ஆஸ்திரேலியாவில் கிளையை தொடங்கி கடை விரித்திருக்கிறார் இந்த ஜூனியர் நித்தியானந்தாவான மகா விஷ்ணு.
மோடி படத்தை வைத்து மோசடி: அண்மையில் இலங்கைக்கு சென்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்த படத்தை தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார் மகா விஷ்ணு. ஆனால் அத்துடன் விக்னேஸ்வரன், பிரதமர் மோடியை சந்தித்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார் மகாவிஷ்ணு. அதாவது மோடியை சந்தித்த விக்னேஸ்வரை தாம் சந்தித்ததாக தம்பட்டம் அடித்திருக்கிறார் மகாவிஷ்ணு.
உல்லாச வாழ்க்கை: தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அப்பாவி தமிழர்களை மூளைச்சலவை செய்து உல்லாசமாக வாழுகிற நித்தியானந்தாவை அப்படியே பின்பற்றி உலகம் முழுவதும் ஜூனியர் நித்தியானந்தாவாக வலம் வருகிற மகாவிஷ்ணுதான் இப்போது தமிழ்நாடு அரசிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications